பறக்கும் கம்பளம்


சில வாரங்களுக்கு முன், எனக்கு நன்கு அறிமுகமாகிய ஒரு தம்பதியினருடன் அவர்களது மகளைக் காணக்கிடைத்தது. அவளுக்கு மாயா என்றொரு அற்புதப் பெயர். இரண்டுவயது. முத்துப்போன்ற பற்கள். நிறைந்த சொக்கு, தீர்க்கமான கண்கள், நெளி நெளியான, மினுங்கும், வாசனையுடைய பட்டுப்போன்ற தலைமுடி.

ஒரு தேனீர்க்கடையினுள்தான் அவளைக் கண்டேன். குழந்தைகளின் அருகில் செல்லும்போது கிடைக்கும் பரிசுத்தமான அலைவரிசையை மனது உணர்ந்துகொண்டிருக்க, அவளருகே உட்கார்ந்திருந்து, அவளுடன் விளையாடிக்கொண்டிருந்தேன். முன்னே உட்கார்ந்திருந்த அவளின் தாய் தந்தையர் மறைந்துபோனார்கள். அதன்பின் உலகமும் மறைந்துபோனது. எமக்கான ஒரு அற்புத உலகம் திறந்துகொண்டது. அப் புதிய உலகில் ஏறத்தாழ 50 வயது வித்தியாசமுடைய அவளும் நானும் மட்டுமே இருந்தோம்.

இப்படியான ஒரு அனுபவம் அண்மையில் எனக்கு வாய்திருக்கவில்லை. அதனை அனுபவித்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. எனது குழந்தைகள் இருவரும் பெண்குழந்தைகளே. அவர்களுக்கிடையில் 4 வயது இடைவெளியுண்டு. மூத்தவளுக்கு 20 வயதாகிறது இப்போது.
எனது பால்யத்துக்காலம் தொடக்கம் குழந்தைகள் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனாலும் நான் தந்தையான பின்பே குழந்தைகளுடனான எனது உறவு முற்றிலும் வேறுபடத் தொடங்கியது. குழந்தைகளைப் பார்ப்பது, ரசிப்பது, அவர்களுடன் பழகுவது, அவர்களுடன் விளையாடுவது, அவர்களை தூக்குவது என்று அனைத்திலும் மனதினை அமைதிப்படுத்தும ஒரு மென்மையான குதூகலப்படுத்தும் ஒரு உணர்வு உண்டு என்பதை கண்டுகொண்டிருக்கிறேன். நான் என்னை முற்றிலும் மறந்துபோகும் நிலை அது.

எனது குழந்தைகளில் மட்டும் இவற்றை நான் உணர்ந்ததில்லை. நான் பழகும் அனைத்துக் குழந்தைகளிலும் இந்த பரிசுத்தமான உணர்வினை அனுபவிக்கிறேன். குழந்தைகளின் நம்பிக்கையை பெறுவது என்பது இலகு அல்ல. முதல் முறை அவர்களைக் காணும்போது நாம் எவ்வாறு அவர்களைக் கையாள்கிறோம் என்பதில் தங்கியிருக்கிறது எதிர்காலத்து உறவு. இதை நான் உணர்ந்தபோது ஒரு குழந்தை என்னைக் கண்டால் பயந்து ஓடத்தொடங்கியிருந்தது.

வடக்கு நோர்வேயில் கல்விகற்றுக்கொண்டிருந்த காலத்தில் எனது ஆசிரியர்கள் சிலரின் வீடுகளுக்கு அருகில் ஒரு வருடம் தங்கியிருந்தேன். அங்கிருந்த ஒரு ஆசிரியருக்கு ஒரு பெண் குழந்தை. அவளுக்கு அப்போது 2 வயதிருக்கும். முதல் நாள் அவளைக்கண்டபோது அவளுக்கு பின்புறமாக நின்றுபாஆஆஆஎன்று சத்தமிட்டேன். பயந்து அழுதபடி வீரிட்டுக் கத்தியபடியே திரும்பிப்பார்த்தாள். அதன் பின் என்னைக் கண்டாலே அழத்தொடங்கினாள். அந்த ஒரு வருடமும் என்னைக் கண்டதும் அழுதாள். அங்கிருந்த ஏனைய ஆசிரியர்களுக்கும் சிறிய குழந்தைகள் இருந்தார்கள். அவர்களுடன் நான் நட்பாயிருந்தேன். ஆனால் அந்த பெண்குழந்தை மட்டும் என்னுடன் நட்பாகவே இல்லை. அதன்பின் நான் குழந்தைகளை பயமுறுத்துவதை நிறுத்திவிட்டேன்.

இப்போது என்னுடன் நட்பாகாத குழந்தைகளே இல்லை. குழந்தைகளுடனான நட்பு வாழ்வின் மிகவும் வலிமிகுந்த காலத்தை கடந்துகொள்ள உதவியது. உதவிக்கொண்டிருக்கிறது. வளர்ந்தோருடனான எனது நட்பு மிகவும் மட்டுப்படுத்தப்பட்டது. விரல்விட்டு எண்ணலாம் எனது நண்பர்களை. ஆனால் எனக்கு பல குழந்தைகள் நட்பாக இருக்கிறார்கள்.

அவர்களில் பலர் என்மீது காட்டும் நம்பிக்கை வாழ்வின் மீதான பிடிப்பினை தக்கவைத்துக்கொள்ள உதவியிருக்கிறது. எங்கு என்னைக் கண்டாலும் எதுவித முன் கற்பிதங்களும் இன்றி தூய்மையான அன்புகலந்த புன்னகையுடன் ஓடிவந்துசஞ்சயன் மாமாஎன்னும் அவர்களது அன்பின் கரைந்துபோகும் நேரங்கள் வாழ்க்கையின் மீது நம்பிக்கையையும் புத்துணர்ச்சியையும் தந்திருக்கின்றன.

குழந்தைகளுடனான உரையாடல்கள் எப்போதும் அழகானவை. கருப்பொருள்களும் அப்படியே. ஆண் குழந்தைகளின் கருப்பொருள்களும் பெண் குழந்தைகளின் கருப்பொருள்களும் வெவ்வேறானவையாகவே இருக்கும். ஆண் குழந்தைகள் விளையாட்டு, திரைப்படங்கள், கணிணி என்று உரையாட விரும்புவார்கள். இவர்களை மென்மையான மனித உறவு, இயற்கை, சூழல் என்று பேசவைப்பதற்கு முயற்சிப்பேன். ஆனால் பெண் குழந்தைகள் பொம்மைகள், நிறங்கள், சித்திரம், உணவு, நட்பு, புத்தகங்கள் என்று பேசினாலும் இயற்கை, சூழல் என்பவற்றில் அதிக கவனமாய் இருப்பார்கள்.

குழந்தைகளிடம் இருந்து நான் கற்றுக்கொண்டது அதிகம். பெரியவர்களிடம் இல்லாத மனிதநேயத்தை, உதவும் மனப்பான்மையை, மிருங்களிடம் அவர்கள் காட்டும் நட்பை, இயற்கையின் மீதான அவர்களது கவனம், விருப்பம் என்பவை என்னை சிந்திக்கவைத்திருக்கின்றன. வாழ்க்கை மீதான அயர்ச்சி வளர்ந்த மனிதர்களான எம்மை வாழ்க்கையின் மகிழ்ச்சியான பக்கங்களை அனுபவிப்பதை தடுக்கிறதோ என்று நான் எண்ணுவதுண்டு. அப்படியும் இருக்கலாம்.

குழந்தைகளிடம் நான் கண்டுகொண்டு இன்னுமொரு அழகிய பழக்கம்சிரிப்பு. ஒரு சம்பாசனையின்போது எத்தனை முறை அவர்கள் சிரிக்கிறார்கள், புன்னகைக்கிறார்கள் என்பதை அவதானியுங்கள். அதேபோல் வளர்ந்தவர்களுடனான உரையாடலில் அவர்கள் எத்தனை முறை சிரிக்கிறார்கள் என்று பாருங்கள். குழந்தைகள் ஒரு நாளைக்கு 400 முறையும் வளர்ந்தோர் 25 முறையும் சிரிக்கிறார்கள் என்று வாசித்திருக்கிறேன். சிரிக்கும்போது எமது மனமும் இலகுவாகின்றது. சுற்றாடலையும் நாம் மகிழ்வாக்குகிறோம். இங்கும் குழந்தைகள் எமக்கு கற்பிக்கிறார்கள். குழந்தைகளின் சிரிப்பின் ஒலிகூட மனதுக்கு அற்புதமானதொரு மருந்து. அந் நேரங்களில் அவர்களின் முகத்தில் ஏற்படும் மாற்றங்கள் வானவில்லைப்போன்று அழகாயிருக்கும்.

மனம் வருந்தியிருக்கும் குழந்தையை, அழும் குழந்தையை, ஏதோ ஒன்றிற்காக அச்சப்படும், ஏங்கித் தவிக்கும் குழந்தையை ஆறுதல்படுத்தியிருக்கிறீர்களா? குழந்தையின் மனதோடு ஒன்றிப்போய் அதன்வலியை உணாந்து அணைத்து, அறுதல்படுத்தி, நம்பிக்கையூட்டி அவர்களை அமைதிப்படுத்தும்போது அவர்களின் மனதில் ஏற்படும் ஆறுதலான அமைதியின் ஓசையை உணர்ந்திருக்கிறீர்களா? ஒரு மனிதனை உயிர்ப்பிப்பதற்கு ஒப்பான அற்புதமான உணர்வு அது. விக்கி விக்கி அழும் குழந்தை மூச்சை ஒவ்வொரு முறையும் விக்கி விக்கி உள்ளே இழுக்கும்போது உங்களின் மூச்சும் திணறுகிறது எனில் நீங்கள் பெருவாழ்வு வாழ்கிறீர்கள் என்று அர்த்தம். குழந்தைகளை தேற்றுவது என்பது ஒரு கலை. தாய்மார்களுக்கு அது இயற்கையாக அமைந்திருக்கிறது. சில அப்பாக்களுக்கும்தான்.

குழந்தைகளின் முன்னால் எப்போதாவது முட்டாளாக நடித்திருக்கிறீர்களா? அது ஒரு பெரும் கலை. இந்தப் பெரிய மனிதனுக்கு ஒன்றுமே தெரியவில்லை என்று அவர்களை நினைக்கவைக்கவேண்டும். உங்களுக்குத் தெரியாததை கற்பிக்க முனையும் அவர்களுடைய மனது மகிழ்ச்சியில் நிறைந்திருக்கும். தம்மை ஒரு பெரிய மனிதாக நினைத்தபடி எமக்கு கற்பிக்கும் அவர்களது சொல்லாடல்கள், செய்கைகள், முகபாவனைகள் என்று அந்த உலகம் பெரியது.

ஒரு முறை 5 வயதான ஒருத்தியிடம் ஒரு சிவப்புப் பூ ஒன்று இருந்தது. நான் அவளிடம்ஏன் பச்சை நிறமான பூவைத்திருக்கிறீர்கள் என்றேன். தலையில் கையை வைத்தபடியேஉங்களுக்கு ஒன்றும் தெரியாது என்றாள்.” அதன்பின்னான அந்த மாலைப்பொழுதில் நான் நிறங்களை அவளிடம் இருந்து கற்றுக்கொண்டேன். அந்த மாலைப்பொழுது அழகானதாய் மாறிப்போனது. கடந்துபோன காற்றும் சற்று நிதானித்து எங்களை பார்த்தபடியே கடந்துபோயிருக்கும்.

குழந்தைகளுக்கு கதை சொல்வது எனக்குப்பிடிக்கும். பெண்குழந்தைகளுக்கு ஒருவித கதைகளும், ஆண் குழந்தைகளுக்கு இன்னொருவித கதைகளுமே பிடிக்கின்றன. குடும்ப உறுப்பினர்கள், அமைதியான மிருகங்கள், நிறங்கள், இயற்கை, அமைதியான நீரோட்டம் போன்ற சம்பவங்கள் உள்ளடங்கிய கதைகளை பெண்குழந்தைகளக்கு பிடிக்கும். ஆனால் ஆண் குழந்தைகளுக்கு விறுவிறுப்பான கதைகள், அரக்கர்கள், மூர்க்கமான மிருகங்கள், ஓடுதல், பாய்தல், வேகம் என்ற கதைகளை; பிடிக்கும். என்னிடம் பெண்குழந்தைகளுக்கான கதைகள் அதிகம் உண்டு. அதில் பல என்னால் உருவாக்கப்பட்டவை. என் குழந்தைகளை அரக்கர்களிடம் இருந்தும் பூதகணங்களிடம் இருந்து பறக்கும் கம்பளத்தில் காப்பாற்றி அழைத்து வந்திருக்கிறேன். வாய்பிளந்திருந்து கதை கேட்டிருப்பாள்கள் என்னவள்கள்.

குழந்தைகளை உறங்கவைப்பதும் எனக்குப் பிடிக்கும். எந்தக் குழந்தையும் மனம் அமைதியில்லாதபோது அல்லது நம்பிக்கையில்லாதவர்களின் கையில் உறங்காது. உங்கள் கையில் ஒரு குழுந்தை உறங்கிப்போகிறது என்றால் நீங்கள் அதிஸ்டசாலி. மெதுவாய் தாலாட்டுப்பாடி அல்லது ஒரு ஆறுதலான ஒலியெழுப்பி குழந்தைகளை தூங்கவைக்கும்போது என் மனமும் ஒருநிலைப்படுவதை நான் உணர்ந்திருக்கிறேன். தூக்கத்தின் மயக்கத்தில் பாரமாகிப்போகும் இமைகளையும், தூங்கிப்போனபின் முகத்தில் வந்தமரும் பேரமைதியும், சீராக மூச்சும்அப்பப்பா அது ஒரு அற்புதமான அனுபவம்.

குழந்தைகளின் உலகம் அற்புதமானது. அதற்குள் நுழையும் தகுதி எமக்கு உண்டா இல்லையா என்பதை குழந்தைகள் அறிவார்கள். நாம் அவர்களின் உலகத்திற்குள் அனுமதிக்கப்பட்டால் அதைவிட பேரதிஸ்டம் வேறெதுவும் இல்லை. இந்த விடயத்தில் நான் பெரும்பேறு பெற்றவன்.


பேரின்ப முக்தியடைய விரும்புபவரா நீங்கள். அப்படியாயின் நீங்கள் தேடும் முக்தி உங்கள் வழிபாட்டுத்தலங்களில் இல்லை.

1 comment:

  1. Well said Sanjayan! Totally agree with you! Kids world is wonderful word.

    ReplyDelete

பின்னூட்டங்கள்