பொம்பளை ரௌடி

அம்மாவின் அட்டகாசங்கள் - 02
******
அம்மா இப்போது அதிகம் வெளியே நடந்து திரிவதில்லை. என புலனாய்வுத்துறை அறிவித்தது. எனவே அம்மாவை அழைத்தபடி ஒரு சிறு நடை நடப்போம் என்று நினைத்தபடியே..
“அம்மா வாங்கோ ஒரு சிறு நடைப்பயணம் போவோம்“ என்றேன்.
“என்னத்துக்கு“ என்றார்.
“கோத்தபாயவை சந்திக்கவேண்டும்“ என்றேன்
“யார் அது... உன்னுடன் படித்த யாருமா?“ என்று சீரியசாகவே கேட்டார்.
ஏதும் விதண்டாவாதமாகக் கதைத்து, அம்மா வரமாட்டேன் என்றால் என்ன செய்வது என்பதால், கடைக்குப்போவோம் என்றேன்.
மாணிக்கம் தங்கமுத்து தம்பதிகளின் 84 வயதுப் புத்திரியும் அந்த புத்திரியின் மூத்த புத்திரனும் நடந்து காலிவீதியை வந்தடைந்தோம்.
காலிவீதியின் மறுபக்கத்திற்குச் செல்லவேண்டும். மாலைநேரமாகையால் போக்குவரத்து வீதியை விழுங்கியிருந்தது. பாதசாரிகளுக்கான போக்குவரத்து மின் சமிக்ஞைவிளக்கு சிவப்பாக எரிந்ததுகொண்டிருக்க.. அம்மா வாகனங்களைப் பார்த்துக்கொண்டிருந்தார். நான் எதிரே இருந்த சாப்பாட்டுக்கடையைப் பார்த்துக்கொண்டிருந்துவிட்டு திரும்பினேன். அம்மாவைக் காணவில்லை.
நிமிர்ந்துபார்த்தேன். கிழவி கிடு கிடுவென்று வாகனங்களுக்கு “நில்“ என்று கையைக் காட்டியபடி, காலி வீதியை ஊடறுத்துத் தாக்கி வீதியின் மறுபக்கத்திற்கு போய்விட்டாள். வீதியில் வாகனம் தாறுமாறாய் வருகிறதே என்ற எண்ணம் சற்றும் இல்லை, அவருக்கு.
நானும் வீதியில் காலை வைத்தேன். ஒரு பேருந்து பெருச் சத்தத்துடன்.... ”மவனே செத்தாய்” என்று எச்சரித்தது. பயத்தில் நின்றுகொண்டேன்.
பாதசாரிகளுக்கான பச்சை விளக்கு எரிந்ததும் பாதையைக் கடந்துபோனேன்.
அப்போது அம்மா கேட்டாரே ஒரு கேள்வி....
”இவ்வளவு நேரமும் என்ன செய்தாய்?”
இந்தப் பொம்பிளை ரௌடியுடன் இனிமேல் காலிவீதியைக் கடப்பதில்லை என்று முடிவெடுத்திருக்கிறேன்.
அப்புறமாய் ஒரு கடைக்குப்போனோம்.
அங்கு நடந்தது, வீதியைக் கடந்ததைவிட பெருங் கூத்து.
அதை நாளை எழுதுகிறேன்.

No comments:

Post a Comment

பின்னூட்டங்கள்