'இவருக்கு ஒன்றும் தெரியாது'

நேற்று பலரின் மத்தியில், கையில் தேனீருடன் சிவனே என்று தனியே குந்தியிருந்தேன்.
நீண்ட வெள்ளைநிறச் சட்டையுடன் முன்பின் அறியாத சிறுமி வந்தாள். புன்னகைத்தாள், அருகில் இருந்த நாற்காலியை இழுத்து உட்கார்ந்தாள்.
அவள் ஒரு இரகசியம் பகிர்ந்தாள்.
அவளின் அம்மாவின் வயிற்றில் ஒரு பேபி இருக்கிறதாம். என்றுவிட்டு அழகிய புன்னகையுடன் மறைந்துபோனாள்.
***
இதன்பின் இரண்டு சிறுவர்கள் அருகில் வந்தார்கள். என்னைப்பார்த்தார்கள். நின்றார்கள்.
விசாரணை ஆரம்பமாகியது.
“பெயர் என்ன?“
”சஞ்சயன்“
“ம்“
கைத்தொலைபேசியில் ஒரு விளையாட்டைக் காண்பித்து
“இது விளையாடுவாயா“ என்றார்கள்
“இல்லை“
“உனக்கு என் அப்பாவைத் தெரியுமா?“ என்று ஒருவன் என்னைக் கேட்டபோது மேலுமொரு சிறுவனும் அங்கு வந்தான்.
“இல்லை அய்யா, எனக்கு அவரைத் தெரியாது“
“ம், அம்மாவைத் தெரியுமா?“
“இல்லை“
இப்போது இரண்டாமவன் கேட்டான்.
'என் அப்பாவைத் தெரியுமா?“
“தெரியாது“
“அங்கே பார், கறுப்பு உடையுடன் நடனமாடுகிறாறே, அவர்தான்“
அவரைப் பார்த்தபின் “ இல்லை அய்யா, அவரையும் தெரியாது“ என்றேன்.
அம்மாவைத் தெரியுமா?
இல்லை ராசா, தெரியாது
மூன்றாமவன் தொடங்கினான்
'என் அப்பாவைத் தெரியுமா?“
“தெரியாது“
”அம்மாவைத் தெரியுமா?”
”இல்லை அய்யா...”
உனக்கு ஒருவரையும் தெரியாது என்றபடியே, மேலும் இரு சிறுவர்களை அழைத்துவந்து அதே கேள்விகளைக் கேட்டார்கள். நானும் ”இல்லை, தெரியாது என்றேன்”
ரவுண்டு கட்டி நின்று சிரித்தார்கள்.
அதைத் தாங்கலாம்... ஆனால்...
அப்புறமாய் என்னைக் கடந்துசென்ற எல்லோரிடமும்
”இவருக்கு ஒருவரையும் தெரியாது என்பதற்குப்பதிலாக, இவருக்கு ஒன்றும் தெரியாது, இவருக்கு ஒன்றும் தெரியாது என்று ஒலிபரப்பிக்கொண்டிருந்தார்கள். அவர்களும் என்னை பரிதாபமாகப் பார்த்தபடியே கடந்துபோனார்கள்.
இதைத்தான் தாங்கமுடியவில்லை.
அடேய்... நான் சிவனே என்றுதானே உட்கார்ந்திருந்தேன். நீங்களாகவே வந்தீர்கள், கேள்வி கேட்டீர்கள், உண்மையான பதிலைச் சொன்னேன்.
அதற்காக இப்படியா விழா முடியும்வரையில் ரணகளப்படுத்தி ஒலிபரப்புவீங்க...
நேற்றில் இருந்து 5 இல் இருந்து 10 வயதுச் சிறுவர்களுக்கு பதிலே சொல்வதில்லை என்று தீர்மானித்திருக்கிறேன்.
எங்கே இருந்தடா வருகிறீர்கள்?
என்ட Oslo முருகா.... ”ஏனப்பா உன் பக்தனை இப்படி” சோதிக்கிறாய்?
************************
வாழ்க்கையின் அற்புதக் கணங்கள் இவைதான்.
இதுவே பேரின்பம்.
இங்குதான் வாழ்வின் நிலத்தடி நீர் இருக்கிறது.

23. oktober

No comments:

Post a Comment

பின்னூட்டங்கள்