”தெறி” விஜய் ஐ சூரசம்ஹாரம் செய்த Oslo முருகன்.

அந்நாட்களில் எனது மூத்தவளுக்கு 2 வயது கடந்திருந்தது. ஆண்டு 1999. நாம் வசித்திருந்ததோ வடமேற்கு நோர்வேயில் ஒரு கிராமத்தில். தமிழர்களுக்கான பொழுதுபோக்குகள் குறைந்த இடம்.
இதே காலத்தில்தான் இப்போது தென்னிந்திய திரைஉலகையும், எனது வயிற்றையும் அடிக்கடி கலக்கும் தென்னிந்திய திரைப்பட நடிகர் விஜய் பிரகாசிக்கத்தொடங்கியிருந்தார்.
அந்நாட்களில் ஏதோ ஒரு தமிழ்த் தொலைக்காட்சி சேவையும் செய்மதி (சட்டலைட்) மூலமாக உலாவந்துகொண்டிருந்தது. பொழுது போகவேண்டுமே என்பதற்காய் ஒரு டிஷ் ஆன்டன்னாவை பூட்டிக்கொண்டேன். தென்னிந்தியாவில் உலாவிய விஜய் எனது வீட்டுக்குள் வந்ததும் இந்த வழியாகத்தான்.
அந்நாட்களில்தான் துள்ளாத மனமும் துள்ளும் படம் வெளிவந்திருந்தது. எனவே தொலைக்காட்சியும் இப்படத்தின் பாடல்களை அடிக்கடி ஒலிபரப்பினார்கள். அதிலும் இன்னிசை பாடிவரும் என்ற பாடல் திரைப்படத்தைப்போன்று மிகப் பிரபலமாகியதால் அப்பாடல் ஒரு நாளைக்கு பல தடவைகள் ஒளிபரப்பாகியது.
எனது மகளுக்கு இந்தப்பாட்டு ஏனோ பிடித்துப்போயிற்று. விஜய் மாமா ஆகினார். சிம்ரன் ஆன்டி ஆகினார். மணிவண்ணண் தாத்தாவாகினார். இந்தப் பாட்டினை எங்கே எப்போது கேட்டாலும் அவளின் முகம் பூவாய் மலர்ந்து, கையும் காலும் தானாகவே ஆடத்தொடங்கின.
தொலைக்காட்சியில் பாடல் ஒலிபரப்பினால் அதன் முன் வாயை ஆ என்று பிளந்தபடியே பார்த்துக்கொண்டிருப்பாள். அந்த நேரங்களில் எனக்கும் சாப்பாடு தீத்துவதும் பிரச்சனையாக இருக்கவில்லை. பிற்காலத்தில் அவளுக்க என்று அந்தப்பாடலை ஒரு வீடியோ கசட்இல் பதிந்த வைத்திருந்தேன்” அவள் என்னிடம் கட்டுப்பட மறுத்தால் விஜய் மாமாவும். சிம்ரன் ஆன்டியும் அவளைக் கட்டுப்படுத்தினர். மணிவண்ணனை அவளுக்குப் பிடிக்கவில்லை.
காலம் கடந்து கொண்டிருந்தாலும் அவளுக்கு “இன்னிசை பாடிவரும்” பாடலில் இருந்த பிரியம் மட்டும் குறையவவே இல்லை. பிற்காலத்தில் நான் பயந்ததுபோன்று அவளுக்கு விஜய் பைத்தியம் பிடித்துக்கொண்டது. அந்த பைத்தியத்திற்கு என்னிடம் மருந்து இருக்கவில்லை.
இதற்குப்பின் காலம் என்னுடன் கோபித்துக்கொண்டதால் அவள் இங்கிலாந்திலும் நான் நோர்வேயிலும் என்றாகியது. எமது தொடர்புகள் குறைந்துபோயின. பெண்குழந்தையை எவ்வாறு வளர்க்கவேண்டும் என்று எனக்கிருந்த கனவுகளைக் கடந்து அவள் சுயம்புவாய் வளர்ந்துகொண்டாள்.
7 - 8 ஆண்டுகளின் பின் என்னுடன் ஒரு மாதம் தங்கியிருக்க வந்திருக்கிறாள்.
அவளுக்கு 19 வயது நடந்துகொண்டிருக்கிறது இப்போது. சுயாதீனமாய் இயங்கும் மனம் கொண்டவளாயும், இவ்வயதில் உலகத்தையே மாற்றவேண்டும் என்று நினைத்த அப்பனைப்போல் அவளது சிந்தனைகளும் இருக்கிறன்றன. கொள்கைகளில் பிடிவாதக்காறியாய் இருக்கிறாள். வயதுக்கேற்ற திமிர் குறைவில்லாமல் கொட்டிக்கிடக்கிறது. இவையெல்லாவற்றையும் மௌனமாய் ரசித்துக்கொண்டிருக்கிறேன், நான்.
அனால் நான் விரும்பாத ஒன்றை அவள் சுவீகரித்திருக்கிறாள். அவளது உலகம் ஆங்கில உலகமாய் மாறிவிட்டது. எப்போதும் ஆங்கிலப் புத்தகங்கள், திரைப்படங்கள், தொலைக்காட்சி, பாடல்கள் என்றிருக்கிறது அவள் உலகம். தடையின்றித் தமிழ் பேசுவாள், அவளுக்கு தேவை என்னும் பொழுதினில் மட்டும். இனி அவளை மாற்றமுடியாது என்பதை உணர்ந்திருக்கிறேன்.
இரண்டு நாட்களுக்கு முன் “இன்னிசை பாடிவரும்” என்ற பாடலை யூடியூப் இல் வேண்டுமென்றே இசைக்கவிட்டேன். என்னைப் பார்த்து கள்ளச் சிரிப்பொன்று சிரித்தாள். கரைந்துபோனேன்.
நேற்று மாலை:
“அப்பா, தமிழ்ப்படம் பார்த்து 100 வருடமாகிவிட்டது, ஒரு படம் சொல். பார்ப்போம் என்றாள்”
“என்ன மாதிரியான படம்? அக்சன், கொமடி, ரொமான்டிக், திறில்லர், ட்ராமா?” என்றேன்
“எனி திங். எ குட் மூவி”
சற்று சிந்தித்தேன்.
“சரி… ஐன்துசன்.கொம்க்கு போய் “காக்கா முட்டை” என்று தேடிப் பாருங்கம்மா” என்விட்டு அயர்ந்துபோனேன்.
சற்று நேரத்தில் என்னை எழுப்பினாள்
“என்னய்யா”
“இவங்க காக்காவின் முட்டையை எடுத்து குடிக்கிறாங்க. பாவம் காக்கா”
“அய்யோ ராசாத்தி, அது படத்துக்காக எடுத்திருப்பாங்க”
“எனிவே… திஸ் ஈஸ் நாட் குட்”
“திரைப்பட காட்சிகளை உண்மை என்று நினைத்து மனதை குழப்பிக்கொள்ளாதே”
அதன்பின் நான் தூங்கிப்போனேன்.
விழித்துக்கொண்டபோது படம் இடைவேளை கடந்து ஓடிக்கொண்டிருந்தது. மகள் படத்தினை மிகவும் ரசித்துப்பார்த்துக்கொண்டிருந்தாள். இடையிடையே பெரிய சிரிப்புச் சத்ததமும் கேட்டது.
படம் முடிந்ததும் “குட் மூவீ” என்று பாராட்டும் கிடைத்தது.
மகள் விஜய் ஐ மறந்துவிட்டாள் என்று எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. நேற்றிரவு அந்த மகிழ்ச்சியில் அயர்ந்து தூங்கிப்போனேன்.
இன்று காலை எழும்புகிறேன். மகள் ஐன்துசன்.கொம் இல் படம் பார்த்துக்கொண்டிருந்தாள்.
“என்ன படம் அம்மா” என்று கேட்டேன்
“தெறி”
எனது நெஞ்சு தெறித்துப்போய் விழுந்தது. நான் எதுவுமே பேசவில்லை. எனது நண்பன் Oslo முருகனின் இன்னொரு திருவிளையாடல் என்று நினைத்தபடியே போர்வையால் தலையை மூடிக்கொண்டேன்.
சற்றுமுன் எழுந்து பார்கிறேன்… மகளின் கணிணி தரையில் கிடக்கிறது. மகளைக்காணவில்லை.
“அம்மா” என்று அழைத்தேன்.
“ம்”
“படம் பார்க்கலியா”
“நோ”
“ஏன்டா”
முறைய்த்துப் பார்த்தாள்.
புரிந்துகொண்டேன்.
Oslo முருகா, தெய்வமய்யா நீ.
உனக்காக நான் முதன் முதலில் நோர்வேயில் மொட்டையடித்து தூக்குக்காவடி எடுக்கிறேன்.

No comments:

Post a Comment

பின்னூட்டங்கள்