புல்லாலானாலும் புருசன் நாயானாலும் புருசன்.

வேதனைகள் பலவிதம். இது சற்று வித்தியாசமானது. நீங்களும் அறிந்து வைத்திருங்களேன்.
எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். அவருக்கு ஒரு மனைவியும் உண்டு. இருவரும் நல்லவர்கள். எனக்கு.
இவர்களை சந்தித்து பல காலம் ஆகிவிட்டதால் சென்ற கிழமை அவர்களை எட்டிப் பார்ப்போம் என்று புறப்பட்டேன். அவர்கள் நகரத்துக்கு வெளியே சற்றுத் தூரத்தில் வாழ்கிறார்கள். எனவே பெருவீதிகள், சிறுவீதிககள், காடு, மலை, அறுகள் கடந்து சென்று வாகனத்தை நிறுத்தியபோது வீடு அழகாய் இருந்தது. வீட்டின் வெளியே நன்ற அல்ஷேசன் நாய்க்குட்டி “நீ யார்” என்பதுபோல் என்னைப் பார்த்து குரைத்தது.
நண்பர் வந்தார். நாய்குட்டியிடம் சத்தம் போடாதே என்றார். அது அவரை ஒரு மனிதாகவே கணக்கில் எடுக்கவில்லை.
நண்பரின் மனைவி வந்தார். ஒரு சிறு அதட்டு அதட்டினார். நாய்குட்டி அமைதியாகியது. என்னை நாய்க்குட்டிக்கு அறிமுகப்படுத்திவிட்டு என்னையும் நாய்குட்டியையும் வீட்டுக்குள் அழைத்துப்போனார். திருடனைக் கண்ட நாய்போன்று நாய்க்குட்டி என் முன்னேயே நாக்கை தொங்கப்போட்டபடி குந்தியிருந்தது. நான் என்ன விளையாட்டுக் காட்டினாலும் அது அசையவே இல்லை.
நாம் உட்கார்ந்திருந்து பேசிக்கொண்டிருந்தோம். நண்பரின் அருமைப் பாரியாரும் வந்தமர்ந்தார்.
அவர்களின் வரவேற்பரை நீள் சதுரமானது. ஒரு மூலையில் உட்கார்ந்திருந்து உரையாடினோம். அந்த இருக்கைக்கு நேரே மறு மூலையில் நண்பரின் சாப்பாட்டுமேசை இருந்தது.
தேனீர், சிற்றூண்டி வந்தது. உண்டு குடித்து மகிழ்ந்திருந்தோம். அப்போதுதான் என் கண் அந்தக் காட்சியைக் கண்டது.
நண்பரின் வரவேற்பறை இருக்கைகளுக்கு மேலே இருந்த அதி விலையுயர்ந்த அலங்கார மின்விளக்கின் ஒரு பகுதி உடைந்திருந்தது.
என்னது உடைந்திருக்கிறதே என்று அதனை ஆராய்ந்தேன். நண்பர் ஆம் இது உடைந்துவிட்டது. இதற்குரிய உதிரிப்பாகத்தை எங்கே வாங்கலாம் என்றார். எனது சிற்றறிவுக்கு அதற்குரிய உதிரிப்பாகத்தை வாங்குவது முடியாத காரியம் என்று புரிந்ததால் அதனைச் சொன்னேன். நண்பரின் முகம் குடிகாரனுக்கு தவறணையில் சாராயம் இல்லை என்றது போலாயிற்று.
நண்பரின் மனைவி அசாதாரண அமைதியாய் இருந்தார். நாய்குட்டியும் தான்.
என் கர்மாவிற்கு எப்போதும் ஒரு கெட்ட பழக்கம் உண்டு. தவறான நேரத்தில், தவறான இடத்தில், தவறான மனிதர்களிடம், தவறான கேள்வியை, தவறிப்போய் கேட்டுவிடுவதுதான் அது. அன்றும் அது நடந்தது.
நான் உட்கார்ந்திருந்தது பதிவான ஒரு சோபாவில் மின் விளக்கு இருந்ததோ ஒட்டகச்சிவிங்கி உயரத்தில். இது எப்படி உடையும் என்று எனக்குத் தோன்றியதை நான் யோசிப்பதற்கிடையில் வாய் அதனை வெளியே துப்பிவிட்டது.
நண்பர் மனையாளைப் பார்க்க.. மனையாள் நண்பரைப் பார்க்க என் நண்பர் அசடு வழிந்தார். நண்பரின் மனைவி அரம்பித்தார்.
நண்பருக்கு நாய் என்றால் அதீத விருப்பம். அவரின் யாழ்ப்பாண வீட்டில் நான்கு திசைகளுக்கும் ஒவ்வொரு நாள் காவல் இருந்ததாம் என்பார். நானும் ஓம் யாழ்ப்பாணம் என்றால் கள்ளர் அதிகம்தான். 4 நாய் காணாதே என்று சற்று பிரதேசவாதமும் காட்டியிருந்தேன் சில வருடங்களுக்கு முன்.
நண்பரின் பையன்கள் இருவரும் வேறு இடத்தில் வேலை செய்வதால் அவர்கள் வேறு இடத்தில் வாழ்கிறார்கள். எனவே நண்பர் நாய்க்குட்டி வாங்குவதற்கு விரும்பினார். விரும்பினால் மட்டும் காணுமா. மேலிடம் அனுமதிக்கவேண்டுமல்லவா. எனவே விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கு ஏற்ற நேரத்துக்காக காத்திருந்திருக்கிறார்.
அந்த நேரமும் வந்தது. நேரம் வந்தபோது நண்பர் நான் இப்போது உட்கார்ந்திருந்த பதிவான சோபாவில் உட்கார்ந்திருந்திருந்திருக்கிறார். மேலிடம் நான் முன்பு கூறிய சாப்பாட்டு மேசையில் உட்கார்ந்திருந்திருக்கிறது.
இப்போது நீங்கள் இருவரும் உட்கார்ந்திருக்கம் சூழலை நன்றாக புரிந்துகொள்ளவேண்டும். ஒரு நீள் சதுர வரவேற்பறை. அதன் மூலைகளுக்கு நாம் A, B, C, D என்று பெயரிவோம். ஒரு மூலையில் (A) பதிவான சோபாவில் நண்பர் உட்கார்ந்திருக்கிறார். எதிரே மறு மூலையில் (C) மனைவி உட்கார்த்திருக்கிறார். வலது பக்க மூலையில் (D) உயரத்தில் மின் விளக்கு சிவனே என்று தொங்கிக்கொண்டிருக்கிறது.
“அம்மா, பெடியளும் வீட்டில இல்ல.. எனக்கு அலுப்படிக்குது” என்று நண்பர் கதையை அரம்பித்தாராம்.
“உங்களுக்கு 25 வருசமா அதுதானே வேலை, வெளியே போய் புல்லு வெட்டுங்கோ” இது அன்பு மனையாள்.
நண்பருக்கு காது சற்று சூடாகினாலும் நாய்குட்டி விடயம் முக்கியம் என்பதால் அமைதியாக இருக்கிறார்.
“உனக்கும் தனிமை. எனக்கும் தனிமை” என்கிறார் நண்பர்.
“சரி.. சரி.. இழுத்தடிக்காம விசயத்தை சொல்லுங்கோ” இது மனைவி
“இல்லம்மா…”
“என்ன அன்பு எக்கச்சக்கமா வழியுது”
நண்பரின் பொறுமை காற்றில் பறக்க ஆயத்தமாக இருந்தாலும், நாய்க்குட்டிக்காக பொறுத்துக்கொள்கிறார்.
“உனக்கும் நீரழிவு நோய், எனக்கும் கொலஸ்ரோல்” இது நண்பர்.
“அது மட்டுமா உங்களுக்கு.. ஒரு வைத்தியசாலையில் இருக்கும் எல்லா நோயும் இருக்கு உங்களுக்கு.. உங்கட பரம்பரை மாதிரி”
நண்பரின் பொறுமை காற்றில்பறந்துவிட்டது. என்றாலும் நாய்க்குட்டி முக்கியமல்லவா. எனவே பறந்த பொறுமையை எட்டிப்பிடித்து கட்டிப்போடுகிறார்.
“அம்மாச்சி”… என்று தேனொழுக ஆரம்பித்து… நான் ஒரு நாய் வாங்குவம் என்று நினைக்கிறன் என்று கூறி முடிக்குமுன் பதில் ஏவுகணையாய் காற்றில் வருகிறது.
“ஏன் எங்கட வீட்டக்கு மட்டும் ரெண்டு நாய் வேணும். ஓன்று காணும் தானே”
நண்பரின் பொறுமை கட்டை அறுத்துக்கொண்டு பாய்கிறது. அவரது கையில் கிடைத்தது தொலைக்காட்சியின் ரிமோட் கொண்ரோல்.
குறிபார்த்து எறிகிறார். ரிமோட் கொன்றோல் காற்றில் பறக்கிறது.
மனைவி இருந்ததோ 4 மீற்றர் தொலையில், அதுவம் நேரெதிரே 90 பாகையில்.
ரிமோட் கொன்றோல் எங்கேயோ இருக்கும் மின் விளக்கினை தாக்கி அதனை உடைத்துவிட்டு தானும் விழுந்துடைந்து தற்கொலை செய்துகொள்கிறது.
இதுதான் அந்த மின்விளக்கு உடைந்த கதை.
எனக்கு ஒரு பெரிய ஆச்சர்யம். எப்படி இந்தக் குறி தப்பியது என்று. காரணம். மின்விளக்கு இருக்கும் இடத்திற்கும் நண்பருக்கும் ஏறத்தாள 3 மீற்றர் இடைவெளி இருக்கும். அதுவும் நண்பரின் மனைவிக்கும் நண்பருக்கும் நடைபெற்ற முன்னரங்கப் போர்முனையின் வட கிழக்குப் பக்கத்தில்.
நண்பரிடம் இந்த சந்தேகத்தையும் கேட்டேன். நண்பர் ஒரு காலத்தில் இந்திய காடுகளில் போர்ப்பயிட்சி பெற்றவர். குறிதவறாமல் சுடுவார் என்று கூறியிருக்கிறார்.
நண்பர் ஒரு சிறு வார்த்தையில் வேதனையைச் சொன்னார்.
“மிஸ்-பையர்”
அதுசரி… உங்களை ரிமோட்கொண்ரோலால் தாக்கி அழிக்க நினைத்த மனிதரின் நாய்க்குட்டி ஆசையை நீங்கள் எவ்வாறு அனுமதித்தீர்கள் என்று நண்பரின் மனைவியைக்கேட்டேன்.
ஒரு நாயை 25 வருசமா வளர்க்கிறன். அந்த நாயை 30 வருசமா பழக்கம். இன்னாரு நாய் வளர்க்கிறது பெரிய வேலை இல்லை என்றார் சர்வ சாதாரணமாக.
நண்பனின் காது செவிடாகி இருந்தது.
நண்பரைப் பார்த்தேன். அவர் நாய்குட்டிக்குமுன்னால் நின்றபடியே உட்கார் என்று கட்டளையிட்டுக்கொண்டிருந்தார். அதுவோ உட்கார மறுத்தது.
அப்போது மனைவி நாயைப் பார்த்து “இரு” என்று கறாரான குரலில் கூறினார்.
நாய்க்குட்டிக்கு முன்பு நண்பர் சோபாவில் குந்திக்கொண்டார். நாயும் நண்பரின் மனைவிக்கு முன்னால் மண்டியிட்டுக்கொண்டது.
நண்பரின் மனைவி என்னைப் பார்த்து வெற்றிப் புன்னகை புரிந்தார்.
நான் புறப்பட்டேன். நண்பர் எனது வாகனம் வரையில் வந்தார். என்னால் ஒரு கேள்வியை மட்டும் அடக்க முடியவில்லை.
“டேய், எப்படியடா மனைவி அந்த விலையான மின் விளக்கையும், ரிமோட்கொன்ரொலையும் உடைத்தபின் நாய்க்குட்டி வாங்குவதற்கு சம்மதித்தார்?” என்றேன்
“வேணாம்…. அதைச் சொன்னால் நீ கதை எழுதி அசிங்கப்படுத்திவிடுவாய்” என்றான்.
இப்ப மட்டும் என்ன வாழுதாம்?

No comments:

Post a Comment

பின்னூட்டங்கள்