ஒரு கூர்வாளின் நிழலும் சாத்தானின் மதமாற்றமும்


நேற்று மதியம் தமிழினியின் ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ வாசித்துக்கொண்டிருந்தேன். தமிழினி விடுதலையாகியிருந்தார் அப்போது. அப்போது எனது வீட்டிற்கு யாரோ நடந்துவரும் ஒலி கேட்டது. மனது மகிழ்ந்தது. நம்மிடம்தான் யாரும் வருவதில்லையே. வருவது யாராக இருக்கும் என்று நினைத்தபோது, அழைப்ப மணியும் அடித்தது.

கதவைத் திறந்தேன். இரண்டு வெள்ளைக்காரர்கள் நின்றிருந்தார்கள். பெரிய கம்பனி ஒன்றின் முக்கியஸ்தர்கள்போன்று உடையணிந்திருந்தார்கள்.

‘வணக்கம், நீங்கள் நோர்வேஜியன் நாட்டு மொழிபேசுவீர்களா’ என்று கேட்டார்கள்.

‘ஆம்’

‘உங்களை சொர்க்கத்திற்கு அழைத்துப்போக வந்திருக்கிறோம்’ என்றதும் வெளியே எட்டிப்பார்த்தேன். வந்தவர்கள் எருமையிலா வந்திருக்கிறார்கள் என்று. அப்படி எததையும் காணக்கிடைக்கிவில்லை. அவர்கள் கையில் பாசக்கயிறும் இருக்கவில்லை.

எனது அமைதி அவர்களுக்கு நம்பிக்கையை கொடுத்திருக்கவேண்டும். பையைத்திறந்து ஒரு புத்தகத்தை எடுத்தார்கள். அதில் சொர்க்கத்திற்கான வழி இருப்பதாகக் கூறப்பட்டது எனக்கு.

வாங்கிக்கொண்டேன். அவர்கள் இனிப்போய்விடுவார்கள் என்று நினைத்தேன். ஆனால் அவர்கள் அங்கு நின்றபடியே ஆரம்பித்தார்கள்.

‘கர்த்தர் உனக்காவும்தான் மரித்தார்’

எனது காதுக்குள் புகைக்கத் தொடங்கியது.

இருப்பினும் என்னுடன் உரையாடியவர் வயதானவர். 70 வயதிருக்கலாம். எனவே மரியாதை கொடுக்கவேண்டியது அவசியமாயிற்று.

என்ன யேசு இறந்துவிட்டாரா? என்று கேட்க நினைத்தேன். ஆனால் அதை அடக்கியபடியே ‘எனக்காகவா அவர் இறந்தார்?’ என்றேன் ஆச்சர்யமாக.

‘ஆம் சகோதரா, உனக்கா, எனக்காக, இவருக்காக, மனிதகுலத்துக்காக’ என்றார்.

மற்றையவர் தொடர்ந்தார் ‘அன்பான சகோதரனே, நாங்கள் கர்த்தர் உயிர்த்தெழுந்த நாளன்று அன்று ஒரு சந்திப்பு நடாத்தவுள்ளோம் நீங்களும் அதில் கலந்துகொள்ளவேண்டும்’ என்றார்.

‘அய்யா, எனது பெற்றோர் இந்துக்கள். நான் கடவுளை நம்புவதில்லை. அவ்வப்பொது Oslo முருகனுடன் சேட்டைவிடுவதோடு எனது ஆன்மீகம் நின்றுகொள்கிறது. எனது மனச்சாட்சியே என் கடவுள் என்றேன்.

‘உங்கள் மனைவியைக் கூப்பிடுங்கள், அவரையும் சொர்க்கத்திற்கு அழைத்துச்செல்வோம்’ என்றனர்

‘அய்யா, நான் விவாகரத்தானவன். எனவே நான் சொர்க்கத்தில்தான் வாழகிறேன்’ என்று கூற நினைத்ததை மீண்டும் அந்த வயதானவரின் வயது தடுத்தது.

‘நான் மணவிலக்கானவன். தனியே வசிக்கிறேன்’ என்று வாயை மூடவில்லை..

ஒருவர் கையை வானத்தை நோக்கித் தூக்கினார். மற்றையவரும்தான்.

‘பிதாவே, இந்த சகோதரனின் வலிகளைகளுக்கு விடுதலையளியும். இவரது வேதனைகளில் இருந்து இவரை இரட்சியும். இவரது குடும்பத்தினருக்கு கிருபையளித்து, இவரது தவறை மன்னித்து இவர்களை இணைத்து வைய்யும்’ என்று வானத்தைப்பார்த்து பெரியவர் கூற, மற்றையவர் தொடர்ந்தார். நானும் வானத்தைப்பார்த்தேன். ஒரு தனிக் காகம் பறந்துபோனது. ஆகா கருடபகவான். நம்ம ஆள்.

‘விவாகரத்து’ சாத்தானின் விளையாட்டு. என்றபோது எனக்கு இரண்டுகாதாலும் ‘ நீராவி அடுப்பில் புகைவருமே, அதுபோன்ற சூட்டினை உணர்ந்தேன்.

‘அய்யா, நான் ஒரு இந்துவாக வளர்க்கப்பட்டவன். இப்போது மதம் அற்றவன். நான் உங்கள் மதத்தினை மதிக்கிறேன். அதேபோல் நீங்களும் என் மதமற்ற மதத்தை மதிக்கவேண்டும்’

‘சகோதரா, இந்த உலகின் பாவங்களைச் சுமக்கவே கர்த்தர் பிறந்தார். அதுவே உண்மை. நிங்கள் எங்கள் ஜெபக்கூட்டங்களுக்கு வாருங்கள். கர்த்தரைப் புரிவீர்கள். உங்கள் மனதை பீடித்ததிருக்கும் சாத்தானை கர்த்தர் அகற்றுவார்’

ஏறாவூரில் வாழ்ந்த போலீஸ் 1124 இலக்கத்தையுடைய கான்ஸ்டபிளான செல்லையா செல்வமாணிக்கத்தின் மூத்த மகனுக்கு ‘இருந்த கொஞ்ச நஞ்ச பொறுமையும் காற்றில் பறந்துபோனது. இருந்தாலும் அந்த மனிதரின் வயது என்னை தடுத்தபடியே இருந்ததால் ‘சென்று வாருங்கள், நான் சாத்தானுடனேயே வாழ்ந்துகொள்கிறேன்’ என்று கூறியபோது, பின்னால் நின்றிருந்தவர் ‘சகோதரா, கோபப்படாதே. சாத்தான்தான் உன்னை பேசவைக்கிறான்’ என்றார்.

அப்பொழுது எனக்கு என்னுடன் ஒன்றாக வாழ்ந்த ஒரு தம்பி நினைவுக்கு வந்தான். அது நான் ஒஸ்லோவுக்கு குடியெர்ந்த காலம் 8 வருடத்திற்கு முன்பான கதை. அந்தத் தம்பியின் தந்தை கிறீஸ்தவர். தாயார் இந்து. காதல் கல்யாணம். இவன் இரண்டு மததைத்தையும் நன்கு அறிந்திருந்தான். உயர்தரத்தில் ‘இந்துகலாச்சரம்’ என்னும் பாடத்தையும் கரைத்துக் குடித்திருந்தான். தமிழின்மேல் பற்றுக்கொண்ட பையன் அவன்.

அவனுக்கு இரவில் ஒரு பேக்கறியில் வேலை. எனக்கு பகல்வேலை. பகலில் தூங்குவான். இரவில் வெளவால்போன்று பறந்து திரிவான். அவன் உறங்கும் நேரங்களில் அவரைன எழுப்புவது உறங்கியிருக்கும் காட்டெருமையை எழுப்புவதற்குச் சமமானது.

ரொம்பவும் நல்லவன். அமைதியான சுபாவம். அவன் ‘அண்ணண் பெயர் சொல்லு, அணிவகுத்து நில்லு’ இயக்கக்காரன். இருப்பினும் எமக்கிடையில் மிக நல்ல உறவு இருந்தது. என்னில் பேரன்பானவன். தினமும் எனக்கு சமைத்துவைப்பான். சற்று கோவக்காரன் அவ்வளவுதான். எனக்கும் அவனில் அன்பு இருக்கிறது.

ஒருநாள் வேலை முடிந்து நான்கு மணிபோல் வீட்டுக்கு வருகிறேன். வீட்டு வாசலில் கதவினை மூடி வெளியே கதவருகில் உட்கார்ந்திருந்தான் தம்பி. முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்துக்கொண்டிருந்தது.

‘அண்ணைக்கு என்னடா சாப்பாடு’ என்றேன் பகடியாக.

‘விசர்க்கதை கதைக்காதீங்கோ, அண்ணை. எனக்கு விசரைக் கிளப்பிப்போட்டாங்கள்’ என்றான்.

‘ஆரப்பு உனக்கு விசரக்கிளப்பினது’ என்று கேட்டேன்.

‘உள்ளுக்கு போய் பாருங்கோ’

உள்ளே சென்றேன். சோபாவில் இரண்டு மனிதர்கள் உட்கார்ந்திருந்தார்கள். அவர்களுக்கு முன் தேனீர், சிற்றூண்டிகள் இருந்தன. அவர்கள் மிக அழகாக உடுத்தியிருந்தார்கள். உயர்ந்த உத்தியோத்தில் இருக்கவேண்டும் என்று நினைத்தபடியே ‘யாரடா இது?’ இது என்றேன்.

முன் கதவு மூடப்பட்டது.

தம்பி வந்தான். மற்றைய இருவரும் கலவரப்பட்டு எழும்பினார்கள்.’

‘அண்ணை, இவங்களை எழும்பவேண்டாம் இருக்கச்சொல்லுங்க’
அப்படியே கூறினேன். அவர்கள் மந்தரித்து விட்டவர்கள்போன்று இருந்தார்கள்.

‘அண்ணை, இண்டைக்கு மத்தியானம் 3மணிபோல வீட்டுபெல் அடி அடி அடி என்று அடிச்சுது. நான் நித்திரை குழம்பிப்போய் யார் என்று பார்த்தால் இவையள்’

‘ம்’
‘நான் நினைச்சன் யாரோ நகரசபை ஆக்கள் என்று. என்னுடன் உரையாடவேண்டும் என்று கேட்டபடியால் நானும் உள்ளே அழைத்து தேனீர் கொடுத்து, கடலை, பிஸ்கட் கொடுததுக் கதைதேன். நான் என்ன சமயம் என்றார்கள். இந்து என்றேன். அதில் இருந்து ஒரு மணித்தியாலத்திற்கு அதிகமாக என்னை மதம்மாற்ற முயற்சித்து தோற்றபின் அவர்கள் புறப்படார்கள்.’

‘ம்’ இது நான்.

‘நான்தான் அவர்களை மறித்துவைத்திருக்கிறேன்’

‘ஏன்டா வில்லங்கத்தை மறித்துவைத்திருக்கிறாய்?’

‘அண்ணை எனக்கு ஒரு மணித்தியாலமாக லெக்சர் அடித்தவைதானே, அப்ப நான் சொல்லுறதையும் கேட்டவேணும்தானே. இவை கேட்கமாட்டினமாம். போகப்போகினமாம். அதுதான் வெருட்டி வைத்திருக்கிறேன்.’

‘நீ என்னடா அவங்களுக்கு சொல்லப்போறாய்? விடுடா அவங்களை.’

‘என்ன விடுறதோ, அவயள் கதைக்கலாம் நான் கதைக்கப்படாதோ? நல்ல நியாயம் இது. நான் கதைக்கிறதை இவயள் ஒரு மணித்தியாலம் கேட்கவேணும். அதுவரை இவயள் எழும்பப்படாது. போலீச கூப்பிறது எண்டா கூப்பிடு என்றும் சொல்லியிருக்கிறன். மாமா வந்தாலும் நான் நியாயம் கேட்பன்.’

அவனின் ரௌத்திரம் என்னை ஆச்சர்யப்படுத்தியது. அவர்களுக்கு எடுத்துச்சொன்னேன். அவர்களோ கிறீஸ்தவம் மட்டுமே மதம் என்றார்கள். இவனோ கதைக்க அனுமதிக்காவிட்டால் விடமாட்டேன் என்றான்.

போலீசுக்கு அறிவிக்கவா என்றுபோது அவனை கதைக்க அனுமதித்தார்கள்.

வெற்றிப்புன்னகையுடன் ஆரம்பித்தான். கணியன் பூங்குன்றனாரில் ஆரம்பித்தான். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்றால் என்ன என்று விளக்கினான். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சமத்துவம் பேசிய மொழி தமிழ் என்றான். திருக்குறள் தெரியுமா என்றான். வேதங்களை பிட்டு பிட்டு வைத்தான். அவர்கள் உங்கள் கடவுளுக்கு சிலையுண்டு என்றபோது இயற்கைவழிபாட்டில் இருந்து தொடங்கி எப்போது கடவுளர்களுக்கு திராவிடர் சிலை வைக்கத்தொடங்கினார்கள், என்றான். அவனுக்குள் உரு வந்துவிட்டதோ என்று பயந்தேன். உணர்ச்சியில் வார்த்தைகள் தடுமாறின. ஏச்சில் தெறித்தது.

இறுதியில் நானும் ஒரு கிறீஸ்தவன் என்று தனது கழுத்தில் இருந்த சிலுவையை எடுத்துக்காட்டிவிட்டு, எனது கிறீஸ்தவம் என்னைப்போல் மற்றையவனையும் மதிக்கிறது. அனைத்து மதங்களையும் ஏற்றுக்கொள்கிறது. ஏனைய மதங்களை, மனிதர்களின் மனங்களை நோகடிப்பதில்லை, அவமதிப்பதில்லை. உங்களைப்போன்றவர்களுக்காகத்தான் யேசு சிலுவையில் ஏறினார். நீங்கள் பாவிகள் என்று கூறி முடித்துபோது 25 நிமிடங்கள் கடந்திருந்தன.

இன்னும் 35 நிமிடங்கள் நீங்கள் உட்கார்ந்திருந்தபின் நீங்கள் போகலாம் என்றான்.

அவர்கள் வாய்திறக்கவில்லை. நானும்தான். அவன் தேனீர் வேண்டுமா என்றபோது அவர்கள் வேண்டாம் என்றார்கள்.

இன்றும் அந்தத் தம்பி என்னுடன் இருந்திருக்கவேண்டும். என்னை சொக்கத்திற்கு அழைத்தவர்களும் அவனின் கூர் வாளினை கண்டிருப்பார்கள்.

அவ்வப்போது கூர் வாள்கள் அவசியமாகத்தான் இருக்கின்றன.

No comments:

Post a Comment

பின்னூட்டங்கள்