காலத்தைக் காயாதே மனதே.



காலத்தைக் காயாதே மனதே, என்ற பெருந்தத்துவத்தை கடந்தபோன சில நாட்கள் கற்பித்துப்போயிருக்கின்றன.

இரண்டு நாட்களக்கு முன் ஒரு பெண்குழந்தையின் முன் உடைந்தழுதேன், இன்று அப்படியானதொரு பெண்குழந்தையினால் மனது நிரம்பி கண்கலங்கியவனாகவும் காலம் என்னை கண்டிருக்கும்.

காலம் ஒரு சூனியக்காரியா அல்லது வரம் தரும் தேவதையா? விடைதெரியா பெருங் கேள்விகளக்குள் இதுவும் ஒன்று.

காலத்தைக் கண்டு அறிய, அனுபத்தை ஒரு துணையாயகக் கொள்ளலாமேயன்றி அதனை துல்லியமாக அறிவிப்பவர் எவருமிலர்.

ஆனால், காலத்தராசு வாழ்க்கைக்காலத்தில் பக்கம் பக்கமாக சாய்ந்தாலும் இறுதியில் சரியாகவே நிறுக்கிறது என்ற எண்ணம் வலுப்பெற ஆரம்பித்துள்ள காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்.

ஐப்பசிமாதம் எனது இளைய மகளின் பிறந்தநாள். லண்டன் சென்று சில மணிநேரங்களை அவளுடன் கழித்திருந்தேன். உணர்ச்சிகளின் கொந்தளிப்பும், பதட்டமும், தோல்வியடைந்த தந்தை என்ற உணர்வும் என்னை ஆட்டிப்படைத்துக்கொண்டிருந்தது.

அடிக்கடி அவளின் தலைக்கோதிவிட்டபோது அவள் திரும்பிப்பார்த்து தோளில் சாய்ந்துகொண்ட நேரங்களில் கண்ணீரை கட்டுப்படுத்த முடியாதிருந்தேன்.. அவளைப் பிரியும்போது எல்லாமே உடைந்துபோனது. ”அப்பா அழாதே” எனறு அவள் என்னை அணைத்துக்கொண்டபோது உடைந்தே போனேன். எனது பலவீனத்தின் உச்சம் இந்த இடம்தான்.

காலமானது இவ்விடத்தில் குரூரமானதொரு சூன்யக்காரிபோன்றே என்னுடன் நடந்துகொண்டது.

நோர்வே வந்ததும் வேலைகளில் மனது ஈடுபட்டதும் மனம் இலகுவாகிப்போனது.
இனி வருவது ஐப்பசிமாதம் ஒரு நிகழ்வில் நடந்த கதை:

அவளை நான் அதிகமாக அறியேன். அவளுக்கு 9 – 10 வயதிருக்கலாம். நாம் சற்று அறிமுகமானவர்கள்தான்.

காணும் இடங்களில் எல்லாம் என்னுடன் தனவி விளையாடும் குணம் அவளிடம் எப்படியோ வந்துவிட்டது. எங்கு கண்டாலும் அவளாகவே தனவுவாள். எனக்கும் அது பிடிக்கும்.
நேற்றும் அவள் வந்திருந்தாள். நாள் முழுவதும் வேலை என்பதால் நிகழ்வின் முடிவிலேயே அரங்கத்தினுள் செல்ல முடிந்தது.

கண்டதும் பாய்ந்தோடி வந்தாள். முதுகில் தட்டிவிட்டு ஓடினாள். அதன் அர்த்தம் எனக்குத் தெரியும். ”எங்கே பிடி பார்க்கலாம்” என்பதே அது. கலைத்தோடினேன். முத்துக்களை சிந்தியவாறே ஓடினாள். அரங்கின் உள்ளே ஆடலும் பாடலும். நாம் வெளியே விளையாடிக்கொண்டிருந்தோம்.

சரி.. வா உள்ளே போகலாம் என்று அழைத்தாள். போனோம். ஒரு இருக்கையில் உட்கார்நது கொண்டேன். அவள் மாயமாய் மறைந்திருந்தாள்.

“மதராசிப் பட்ணம்”த்தில் இருந்து மனதை மயக்கி தாலாட்டும் ஒரு பாட்டு. பாடலில் என்னை மறந்திருக்கிறேன். திடீர் என வந்து என் மடியில் வந்து குந்திக்கொண்டாள். தன் கைகளை, என் தலையை சுற்றி மாலையாகப்போட்டு, மார்பில் சாய்ந்துகொண்டு கால்களை ஊன்றி என் மடியை அசைத்தாள். நானும் தாலாட்டுவது போல் அசைக்கலானேன்.

அவளும் பாடலை ரசிக்கிறாள் என்றே உணாந்தேன். நாம் இடத்தை மறந்தோம்… காலத்தை மறந்தோம். என் பூக்குட்டி என்னிடம் வந்துவிட்டது போலிருந்தது அந்த சில கணங்களும்.
காலம், என் மனதுக்கு தந்த ஆறுதலான அமைதியான உணர்வை என்னவென்பேன். அற்புதமானதொரு நிகழ்வு அது.

காலமானது வரம் தரும் தேவதை என்பதை உணர்ந்த கணங்கள் அவை.
பாடல் முடிந்தவுடன் எழுந்து மறைந்துபோனாள். நிகழ்வு முடியும் தறுவாயில் நான் வேலையாய் நின்றிருந்தேன். “நான் சென்று வருகிறேன்” என்று கையைக் காடடினாள். நானும் கையைக் காட்டினேன். அப்புறமாய் மறைந்துவிட்டாள்.

திடீர் என என்னை யாரோ பின்புறமாக அணைத்தபடி என்னில் சாய்வதுகொள்வதுபோல் இருந்தது. கையின் அளவில் அது யார் என்று புரிந்தது. என்கைகள் அவளின்கையைப் பற்றிக்கொண்டது. ஓரிரு செக்கன்கள் மட்டும். நான் சுதாரிததுக்கொள்வதற்கிடையில் எதுவுமே போசாது ஓடிவிட்டாள்.

கண்கலங்கிப்போனது அவளது பேரன்பில்.

இப்போதும் அந்த நம்பிக்கை மிகுந்த சிறு கைகளின் பாதுகாப்பான உண்ர்வை என் மனது உணர்ந்து கொண்டிருக்கிறது.

காலத்தை காயாதீர்கள் நண்பர்களே.
காலத் தராசு நியாயனமானது.

18. October 2015

No comments:

Post a Comment

பின்னூட்டங்கள்