மழையெனப் பெய்யும் காமம்

பசித்த மானுடம் (கரிச்சான் குஞ்சு) மற்றும் கங்கணம் (பெருமாள்முருகன்)  ஆகிய நாவல்களை நத்தார் விடுமுறையின்போது வாசித்து முடித்தேன்.

காமத்துடன் மனிதர்கள் நடாத்தும் போராட்டமானது எத்தகையது என்பதை இந்த இரு நூல்களும் தத்தமது கதைமாந்தர்களினூடாக அழகாகக் கூறுகிறன.

காமம் மழையைப் போன்றது. அது வெள்ளமாயும் பாயும், வறண்டும்போகும் என்று எங்கோ வாசித்திருக்கிறேன்.

மழைபோன்ற காமம் இல்லாவிட்டால் மனிதன் வறண்டுவிடுகிறான் என்பதற்கு உதாரணமாக ”கங்கணம்” நூலின் நாயகன் மாரிமுத்து காண்பிக்கப்படுகிறான். வெள்ளம்போன்ற அதீத காமம் மனிதனை எவ்வாறு அழிக்கிறது என்பதற்கு  உதாரணமாக ”பசித்த மானுடத்தின்” நாயகன் கணேசன் காட்டப்படுகிறான்.

எனக்கு கங்கணம் அதிகமாக பிடித்துக்கொண்டது என்றே கூறுவேன்.  கிராமத்து மனிதர்கள், குடும்ப உறவுகள், சாதீய நடைமுறைறைகள், மொழியாடல், கதை பின்னப்பட்ட யதார்த்தம், திருமணமாகாதவனின் வாழ்க்கை, காமவேட்கை, கனவுகள் என்று  பலதும் மிக அழகாக கூறப்பட்டிருக்கிறது.

பசித்தமானுடத்தில் ஓர்பாலுறவு முக்கிய இடத்தினைப்பெற்றிருக்கிறது. அதீதக் காமம் ஆண்களிடத்தில் மட்டுமல்ல பெண்களிடத்திலும் உண்டு என்பதும் இங்கு பேசப்படுகிறது. தொழுநோய் கண்ட கணேசனுக்கு தனக்கு வைத்தியம்செய்யும் கன்யாஸ்திரிகளிமும்,  அவனுடன் பிச்சையெடுக்கும் கண்பார்வையற்ற பிச்சைக்காரின்மேலும் கட்டுக்கடங்காத காமம் ஏற்படுகிறது.  கன்யாஸ்திரிகளிடத்தில் காமுறுவது தவறு என உணர்ந்து, விலகி வேறு இடம் செல்வதால் ஒருவிதத்தில் தப்பிக்கொள்ளும் அவன்,  கண்பார்வையற்ற பிச்சைக்காரயினை திட்டமிட்டே அடைவதும், மனிதனின்  மனச்சாட்சிக்கும் காமத்துக்குமான போராட்டங்கள்.

இறுதியில் அவன் காமத்தை வென்று துறவியாவதும்,  கதை ஒரு வித happy endingஆக முடிவதும் எந்தளவு யதார்த்தமானது என்ற கேள்வியில் உழன்றுகொண்டிருக்கிறேன்.

இவ்விரண்டு புத்தகங்களையும் அடுத்துடுத்து வாசிக்கக் கிடைத்தது தற்செயல் சம்பவமே. ஆனால்  இவற்றை அடுத்தடுத்து வாசித்தனால் மனிதவாழ்வில் காமம் எத்தனை வடிவங்களில் மனிதர்களை ஆட்டிப்படைக்கிறது என்பதை அறியக்கூடியதாக இருந்தது.

சற்று நாட்களுக்கு முன்பு புதுமைப்பித்தனின் ”காஞ்சனை”  என்னும் சிறுகதையில் உள்ள படிமங்களையும், சூட்டுசுமங்களையும் அறியக்கிடைத்தது. அங்கும் காமம்தான் கருப்பொருள். ஆனால் அது ஒரு பேய் என்னும் உருவகத்தினுள்ளால் படிமமாகக் காட்டப்படுகிறது. கதாநாயகனின் படுக்கையில் பிணவாடையும், துர்நாற்றமும் அடிக்கிறது.

எஸ். ரா காமத்தினைப் பற்றி இவ்வாறு எழுதியிருக்கிறார்.

”கனியில் துளையிட்ட புழு வெளியில் தெரியாமல் கனியைத் தின்றுகொண்டிருப்பதைப் போல காமம் பிறர் அறியாமல் உடலினுள் நெளிந்து கொண்டேதான் இருக்கிறது. காமத்தை எதிர்கொள்வதும், வெற்றி கொள்வதும் எளிதானதில்லை. காமத்தைப் பற்றிய நமது அறிதல் மிக ரகசியமானதாகவும், அறியாமை நிரம்பியதாகவுமே இருக்கிறது. உடல் சதா கொந்தளிப்பும் பீறிடலும் கொண்ட ஒரு நீரூற்றைப் போன்றது. அது தனக்கென ஒரு இயக்கத்தைஎப்போதும் நடத்திக்கொண்டேதான் இருக்கிறது. அதை நம் கட்டுக்குள் வைப்பதும், மீட்டுவதும் எளிதானது இல்லை.

காமம் யாருக்கும் தெரியாமல் மறைத்து வைக்கப்படவேண்டிய ஒரு ரகசியமல்ல. அதே சமயம் கூட்டம் போட்டு உபதேசிக்கப்பட வேண்டியதுமல்ல. சிரிப்பதும் அழுவதும் போல அது ஒரு உணர்சியின் வெளிப்பாடு! ”

எஸ். ராவைப்போல் பல சிக்கலான விடயங்களை இலகுவாகவும் ஆழமாகவும் கூறுபவர்கள் மிகக் குறைவு.

”கங்கணம்”, ”பசித்த மானுடம்” ஆகிய நூல்கள் மனித உணர்ச்சிகளை,  அதன் செயற்பாடுகளை, அதன் பலாபலன்களை கூறுகின்றன.

வாசித்துப்பாருங்கள்.

No comments:

Post a Comment

பின்னூட்டங்கள்