சனிமாற்றம் -- படு அமோகமாய் இருக்கிறது

நேற்று முன்மதியம் கடைக்குப்போயிருந்தேன். பெரீய கடை. சூப்பர் மார்கட் என்று வைத்துக்கொள்ளுங்கள். கடையின் ஆரம்பத்தில் இருந்து முடிவுரை சுற்றியபோது கால் வலித்தது. அந்தளவு  ‌பெரிய கடை.

எனக்கு பாணுடன்  சேர்த்து உண்பதற்கு பதப்படுத்தப்பட்ட இறைச்சி தேவைப்பட்டது. அதைத் தேடி எடுத்துக்கொண்டு ஒஸ்லோ முருகனை நினைத்தபடியே பணம் செலுத்தும் இடத்திற்கு நடந்துகொண்டிருந்தேன்.

“ண்ணா, வணக்கமுங்கண்ணா” என்பது போல நோர்வேஜிய மொழியில் ஒருவர் எனக்குப்பின்னால் இருந்து அழைப்பது கேட்டது.

திரும்பிப்பார்த்தேன். ஒருவர் பெரும் புன்னகையை வாயில் நிறுத்தி நின்றிருந்தார்.

புருவத்தை உயர்த்தி என்ன பிரச்சனை என்றபோது…
“எனது பெயர் பவுல். நீங்கள் எங்கள் கம்பனியின் பதப்படுத்தப்பட்ட இறைச்சியை வாங்கியிருக்கிறீர்கள். மிக்க நன்றி. மிக்க மகிழ்ச்சி” என்றவாறு தனது அடையாள அட்டையைக் காட்டினார். அதில் நான் வாங்கியிருந்த இறைச்சி தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் இருந்தது.


“ம்”

“உங்களுக்கு நேரம் இருந்தால் நான் உங்களிடம் சில கேள்விகளை கேட்கலாமா”


நமக்குத்தான் இப்படியான கேரக்டர்கள் என்றால் கருவாடு சாப்பிடுவதுபோல இன்பம் என்பதால் “ ஆம். அதற்கென்ன கேளுங்கள்” என்று தருமியிடம் கேளும் கேளும் கேட்டுப்பாரும் என்ற சிவாஜி போல் நெஞ்சை நிமிர்த்தி நின்றேன்.

“அய்யா, நீங்கள் பாதையின் நடுவில் நிற்கிறீர்கள். இப்படி ஓரத்துக்கு வாருங்கள். மற்றவர்களுக்கு இடைஞ்சல் இல்லாது நிற்போம்” என்று எடுத்த எடுப்பிலேயே என்னைக் கவிட்டார், சேல்ஸ்மேன். இனி அவரை சேல்ஸ்மேன் என்றே அழைப்போம்.


ஒதுங்கி நின்றுகொண்டேன்.. அவர் குனிந்த தனது பையினுள் இருந்து ஒரு ஐபாட் எடுத்தார். எனக்காக இருக்குமோ என்று நான் ஆசைப்பட்டது உண்மைதான்.

அவர் ஐபாட்ஐ தொட்டார். தொட்டால் பூ மலரும் பாடலைப் போன்று அது மலர்ந்தது. காதலியை தூக்கிவைத்திருப்பது போன்று அதை கவனமாக பிடித்திருந்தார்.  என்னிடம் ஒரு புத்தகம் போன்றதொன்றைத் தந்தார். வாங்கிக்கொண்டேன்.

“அதை சற்று வாசியுங்கள். நான் எனது கேள்விகளை தயார்படுத்துகிறேன்” என்றார்

ஏற்கனவே 2 – 3 நிமிடங்கள் கழிந்திருந்தன. எனக்குள் எரிச்சல்வரும் சமிக்ஞை சற்றுத் தொலைவில் வந்துகொண்டிருந்தது.

நான் வாசித்தேன். அதற்குள் சேல்ஸ்மேன் தனது கணைகளை என்னை நொக்கி ஏவத்தொடங்கினார்.


“வயது”
“49?”
”ஆணா, பெண்ணா?”
“என்ன நக்கலா?”
“இல்லை.. கணிணி அப்படி கேட்கிறது”
“ஆண் என்றுதான் நம்பிக்கொண்டிருக்கிறேன்”
“ம்”
”ஏன் இந்த இறைச்சியை வாங்கினீர்கள்?”
“பசித்தது”
சிரித்துவிட்டு “ஏன் வேறு கம்பனிகளின் இறைச்சியை வாங்கவில்லை?”


சரி.. இதை வைத்துவிட்டு மற்றைய கம்பனியுடையதை எடுக்கவா என்று கேட்க நினைத்தேன். என்றாலும் அடக்கிக்கொண்டேன்.


“எனக்கு இந்த கம்பனியின் இறைச்சி பிடிக்கும்”
“ஏன்?”
“தெரியாது, ஆனால் பிடிக்கும் - உனது மனைவியை உனக்கு பிடிப்பதுபோல” என்றேன். மனிதர் நகைச்சுவையை ரசிப்பார் என்று நினைத்தேன். அவர் கேள்வியில் குறியாய் இருந்தார்.


“சுவை, தரம், இறைச்சி அடைக்கப்பட்டிருக்கும் விதம், விளம்பரம்… இவற்றில் ஒன்றறை நீங்கள் தெரிவு செய்யலாம்.
“சுவை”
”இது மட்டும்தானா?”  குரலில் ஏமாற்றம் தெரிகிறது
“சர்வ நிட்சயமாக அது மட்டும்தான்”
”ஏன் உங்களுக்கு தரம், இறைச்சி அடைக்கப்பட்டிருக்கும் விதம், விளம்பரம் போன்றவை எங்களுடைய தயாரிப்பை வாங்கத்தூண்டவில்லை?”

எனக்கு வடிவேலு ஒரு படத்தில் இசை எங்கிருந்து வருகிறது என்று ஒரு பைத்தியத்தை கேட்டு அதன்பின் அவர் பட்ட அல்லல் நினைவுக்கு வந்தது.

”தெரியாது”
”தரத்தில் நம்பிக்கையில்லையா?”
”நான் அப்படிச் சொல்லவில்லை”
”விளம்பரம் பிடிக்கவில்லையா?”
”என்னிடம் தொலைக்காட்சிப்பெட்டி இல்லை”
”சுற்றுச் சூழலை மாசுபடுத்தும் கழிவுகள் குறைந்த எங்கள் பொலித்தீன் பை பிடிக்கவில்லையா?”

எனக்குள் எரிச்சல்வரும் சமிக்ஞை சற்றுத் தொலைவில இருந்து இப்பொது சற்று அண்மையில் வந்திருந்தது.

” உங்களிடம் உள்ள புத்தகத்தில் உள்ள எங்கள் தயாரிப்புக்களில் எதை வாங்குவீர்கள்?”

”இப்படியே நீ கேட்டுக்கொண்டிருந்தால் எதிர்காலத்தில் ஒன்றையும் வாங்கமாட்டேன்” என்று சொல்ல நினைத்தாலும் மனம் இடம் கொடுக்கவில்லை.

சேல்ஸ்மேன்ஐ மகிழ்விப்பதற்காக அதில் இருந்த பொருட்களில் 6 – 7 பொருட்களைக் காட்டினேன். அதன் பின்தான் அது எவ்வளவு முட்டாள்தனம் என்று புரிந்தது. மனிதர் அவற்றில் ஒவ்வொன்றுக்கும் பல கேள்விகளை வைத்திருந்தார்.

”இந்தக் கடைக்கு ஒரு மாதத்தில் எத்தனை தடவை வருகிறீர்கள்?”
”நான் இந்தக் கடைக்கு வருவதே இல்லை. இன்று இந்த ஊருக்கு வந்திருப்பதால் இந்தக் ககை;கு வந்தேன். எனது வீட்டுக்கும் இந்தக் கடைக்கும் இடையில் ஏறத்தாள 35 கி.மீ”

”ம் ..  உனது விலாசம் என்ன?”
”கூறினேன்”
கணிணியில் தட்டினார். ”உனது வீட்டில் இருந்து மேற்கே 1 கி.மீ தூரத்தில் எங்கள் பொருட்களை விற்கும் கடை இருக்கிறது. அங்கு வாகனம் நிறுத்துமிடம் இலவசம். இப்போது அங்க காலநிலை 5 பாகை.” என்றார்

”கேள்விகள் முடிந்துவிட்டதா”
”இல்லை இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறது”
விதி எப்படியெல்லாம் சதி செய்கிறது என்பதை நான் நினைத்துக்கொண்டேன் திடீர் என்று சனிமாற்றம் நினைவுக்கு வந்தது. பழியை அதன்மேல் போட்டுவிடுவோம் என்று எண்ணிக்கொண்டேன்.

”இந்த  இறைச்சி கொள்கலனை கண்டிருக்கிறாயா” என்று கேட்டபடியே ஒரு வட்டமாக கொள்கலனைக் காட்டினார். அது என்னைப்போலவே அடக்கமானவும், அழகாகவும் இருந்தது.

”இல்லையே, இது அழகாகவும் செக்சியாகவும் இருக்கிறது”
மனிதர் மர்மான புன்னகைபுரிந்தார்.

”இது எங்கள் புதிய வெளியீடு”
”அப்படியா, மகிழ்ச்சி, வாழ்த்துக்கள்”
”நன்றி,  இனிமேல் நீ இந்த கொள்கலனை வாங்குவாயா நீ வாங்கியதை வாங்குவாயா?”
”புதியதைத்தான் வாங்குவேன்”
”ஏன்”
”அழகானதாகவும், செக்சியானதாகவும் இருக்கிறது”
சிரித்தார்

”இது குறைந்தளவு சூழல்மாசுபடும் கழிவுப்பொருட்களை கொண்டது”
”ம்”
“இது விலை குறைவு”
”ம்”
“உள்ளடக்கத்தின் நிறையும் அதிகம்
“ம்”

எனக்கு எரிச்சல் வாசல்கதவுவரை வந்திருந்தது. எனது மிகப்பெரிய பலவீனங்களில் முக்கியமானது மனதர்களுடனான உரையாடலகளை முறிப்பது. அது இங்கும் சிக்கலைத்தந்தது. எனவே சிரத்தையில்லாது பதில் சொல்வது போல “ம்.. ம்.. ம்.. “ என்று பதிலளித்தேன். மனிதர் அதற்கொல்லாம் அசைபவராகத்தெரியவில்லை.

கேள்விகள் தொடர்ந்தது

“எங்கள் கம்பனியைப்பற்றி உங்களுககு என்ன தெரியும்?”

கடுப்பு ஏறி தலையில் உச்சியில் நின்று ஆடிக்கொண்டிருந்தது.

“கேள்வி கேட்டே நுகர்வோரை கம்பனியின் பொருட்களை வாங்காது பண்ணும் ஒரே கம்பனி” என்று சொல்வோம் என்று நினைத்தேன். ஆனால் முடியவில்லை.

“உலகப் புகழ்பெற்றது” என்று அள்ளிவிட்டேன்.
“எங்களின் பங்கு தாரராக சேர்ந்துகொள்ள விருப்பமா?”
“விருப்பம். பங்குகளை இலவசமாகத் தருவீர்களா”?
”....:”
“நண்பரே! உங்களின் பொன்னான நேரத்தை எங்களுக்காக செலவிட்டதற்கு நன்றி. உங்கள் தொலைபேசி இலக்கத்தை இந்த இடத்தில் எழுதுங்கள் என்று ஒரு கொப்பியை நீட்டினார்.

அதில் இன்றைய திகதிக்கு கீழ், எனக்கு முன்; ஒரே ஒருவர் பதிலளித்திருந்தார் என்பதற்கு சாட்சியாக அவரது கையெழுத்து இருந்து.  என்னைப்போல  ஒருவன் என்று நினைத்தபடியே தொலைபேசி எண்ணை எழுதினேன்.

ஏறத்தாள 30 நிமிடங்களை தின்றிருந்தார் சேல்ஸ்மேன்.

நன்றி என்று கூறிப்புறப்பட்டேன்.
சற்றுத் தூரம் நடந்திருப்பேன்..

“ண்ணா, வணக்கமுங்கண்ணா” என்பது போல ஒரு குரல் கேட்டது. கேட்காததுபோன்று விரைவாக நடந்தேன். மீண்டும் அருகில் “ண்ணா, வணக்கமுங்கண்ணா” என்பது போல கேட்டது. கேட்காதது போல நடந்தேன்.
எனது தோளில் யாரோ தட்டினார்கள். பயத்துடன் திரும்பிப்பார்த்தேன். சாட்சாத் சேல்மேன்னேதான் நின்றருந்தார்.

”நண்பரே.. உங்களுடைய நேரத்தை செலவளித்ததற்காக எமது கம்பனி உங்களுக்கு 100 குறோணர்களை தந்திருக்கிறது. இந்த அட்டையை பாவித்து அதற்குரிய பணத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள் என்றார்.
20 நிமிடங்களுக்கு 100 குறோணர்கள் மிக மிக சிறந்த சம்பளம்.
சனிமாற்றம் நன்றாகத்தான் இருக்கிறது.

1 comment:

பின்னூட்டங்கள்