Watchtower திரைப்படம் - எனது பார்வை

அவ்வப்போது எதிர்பாராமல் சிறந்த படங்களைக் காணக்கிடைக்கும். அப்படித்தான் Watchtower என்னும் படமும். இது துருக்கிய நாட்டுப் படம்.

சமூகத்தின் பேசாப்பொருளாய் இருக்கும் கருக்களில் ஒன்றை மிக அழகாக ஆர்ப்பாட்டம் இன்றி படமாக்கியிருக்கிறார் இயக்குனரான Pelin Esmer.

படத்தின் வெற்றியே அதன் யதார்த்தம் நிறைந்த எளிமை, மிகைப்படுத்தப்படாத நடிப்பு முக்கியமாக கதையின் கரு.

வாழ்க்கை தந்த கசப்புக்களால் சுற்றாடலில் இருந்து விலகி வாழ்க்கையைத்தேடும் இரு மனிதர்களின் கதையே இந்தப் படம். விறுவிறுப்பு இல்லை. ஆனால் படத்தின் யதார்த்தம் எம்மைக் கௌவிக்கொள்கிறது.
திருமணமாக முன் கர்ப்பமுற்ற ஒரு பெண் பேருந்து ஒன்றில் கடமையாற்றுகிறாள். பெற்றோர் அவள் பாடசாலை விடுதியில் வாழ்கிறாள் என்றே நம்புகிறார்கள்.

அதே ஊருக்கு விபத்தில் தன் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்த ஒருவர் காட்டுஇலாகா அதிகாரியாக வருகிறார்.

அந்தப்பெண் தனது தாயிடம் சென்ற ஒருநாள் தாயாருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் தன் கர்ப்பத்துக்கு யார் காரணம் என்று கூற தாய் மௌனத்தையே பதிலாகக்கொடுக்கிறார். அப்பெண் சீற்றத்துடன் வீட்டைவிட்டு வெளியேறுகிறாள்.

அவள் பேருந்தில் இருந்து வேலையைமாறி அதே நகரத்தில் ஒரு சிற்று+ண்டிச்சாலையில் வேலைசெய்யும் ஒருநாள் அவளுக்கு பிரசவ வலி எடுக்கிறது. காட்டுஇலாகா அதிகாரி இப்பெண் வலியுடன் சிற்றூண்டிச்சாலையில் இருந்து வெளியேறுவதை அவதானிக்கிறார். சற்று நேரத்தில் அவள் குழந்தை ஒன்றை பிரசவிக்கிறாள்.

குழந்தையை ஓரிடத்தில் மறைத்துவைத்த பின் அவள் அவ்வூரைவிட்டு வெளியேறுவதை அவதானிக்கும் காட்டிலாகா அதிகாரி அவளைப் பின்தொடர்ந்து செல்லும்போது அவள் பிரசவித்திருக்கிறாள் என்பதை கண்டுகொள்கிறார். அவள் மிகவும் சோர்வாக இருப்பதனால் தனது வீட்டுக்கு அழைத்துச்சென்று அவளுக்கு சிகிச்சையளித்தபின் குழந்தையையும் கண்டுபிடித்து அப்பெண்ணிடம் ஒப்படைக்கிறார்.

குழந்தையைப் பராமரிப்பதிலும் அப் பெண்ணைப் பராமரிப்பதிலும் அவர் உதவுகிறார். ஒருநாள் குழந்தையை விட்டுவிட்டு அப்பெண் தப்பிஓட, முயலும்போது அவர் அப்பெண்ணை தேடிப்பிடிக்கும்போது நடக்கும் உரையாடலில் தனது தாயாரின் அண்ணணால் பாலியல்துஸ்பிரயோகம்செய்யப்பட்டதால் உருவான குழந்தைஇது என்று அவள் கூறுகிறாள். காலப்போக்கில் அவர்களுக்கிடையில் ஒரு உறவு மலர்வதாய் படம் முடிவுறுகிறது.

சமூகத்தின் இருண்டதொரு பக்கத்தை மிகவும் அழுத்தமாக கூறியிருக்கிறார் இயக்குனர்.

இப்படம் பல திரைப்படவிழாக்களில் பங்குபற்றியிருக்கிறது என்பது இப்படத்தின் தரத்தையும் சிறப்பையும் கூறுகிறது.

No comments:

Post a Comment

பின்னூட்டங்கள்