மாவீரர் வாரத்தில் களியாட்டவிழா - வரலாறு எல்லோரையும் கவனித்துக்கொண்டேயிருக்கிறது


நான் 23.10.12 அன்று The Srilankan assosiation of norway மாவீரர் நாட்கள் நடைபெறும் காலப்பகுதியில் ஒரு களியாட்டவிழாவினை ஒஸ்லோவில்  தமிழர்களை இணைத்து நடாத்துவது பற்றி எனது முகப்புத்தகத்தில் ஒரு பதிவிட்டிருந்தேன்.


பார்க்க:
முகப்புத்தகப் பதிவு

23ம் திகதி எழுதிய பதிவுக்கும் இன்றைக்கும் (15.11) இடையிலான காலப்பகுதியில் எனக்குக் கிடைத்த தகவல்கள் சிலவற்றை நான் பகிரவும், எனது சில தனிப்பட்ட கருத்துக்களை பதியவும் விரும்புகிறேன்.

  1. நோர்வேக்கான இலங்கைத் தூதுவர் சமூகமளித்த, தமிழர்கள் கூடும் பொது இடமொன்றில் இந் நிகழ்வு பற்றிய விளம்பரங்களை இணைக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார். இதன் மூலம் தூதுவராலயத்திற்கும் இந் நிகழ்விற்கும் நெருங்கிய தொடர்பிருப்பது புலப்படுகிறது.
  2. The Srilankan assosiation of norway அமைப்பினரால் இந் நிகழ்வு வருடாந்தம் கார்த்திகை மாத இறுதி வாரத்தில் நடைபெறும நிகழ்வு அல்ல.
  3. இந்நிகழ்விற்கு அழைக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் கருத்துக்களுக்கு மாற்றுக்கருத்துடைய சில தமிழர்கள், தாம் ஏற்கனவே பிளவுபட்டிருக்கும் எமது சமுதாயத்தின் நலன் கருதியும், மாவீரர்களைக் கொண்டாடும் எம்மவர்களின் கருத்துக்களை மதிப்பதாலும் தாம் இந் நிகழ்வினில் கலந்துகொள்ளவில்லை என அறிவித்திருக்கிறார்கள்.
  4. தாம் இக் களியாட்டவிழாவினைத் திட்டமிட்டபோது மாவீரர் தினம் வருவது தமக்கு தெரியாது என்றும், தற்போது நுளைவுச்சீட்டுக்கள் விற்றபின் இந் நிகழ்வினை நிறுத்தமுடியாது என்றும், எனினும் அனைவரின் ஒற்றுமையையுமே தாம் விரும்புவதாகவும் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் கூறுகிறார்கள்.
  5. தற்போது Roots  இசைக்குழுவினர் இந்நிகழ்விற்கு இசையமைக்கவில்லை. தனிப்பட்ட சில தமிழர்கள்  இவ்விழாவிற்கு இசையமைக்கிறார்கள்.

எனது கருத்துக்கள்:

The Srilankan assosiation of norway அமைப்பினர் சில தமிழர்களைகளை உள்வாங்கியும், சில தமிழ் இசைக்கலைஞர்களை இணைத்தும் இந்நிகழ்வினை திட்டமிட்டபோது, அத்தமிழர்கள் மாவீரர்தினம் பற்றி கூறவில்லை என்றும், The Srilankan assosiation of norway க்கு வருடாந்தம் நடைபெறும் மாவீரர் தினம் வருவது தெரியாது என்று கூறுவதை நாம் ஏற்றுக்கொள்கிறோம் எனக் கொள்வோம்.

அதேவேளை இக்களியாட்டவிழா பற்றிய தமிழர்களின் விசனம் பற்றி எனது நண்பர்கள் The Srilankan assosiation of norway க்கு அறிவித்திருந்தார்கள். அவை 23ம் திகதியளவிலேயே அறிவிக்கப்பட்டன.

ஏறத்தாள விழா நடைபெறுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே, விழாபற்றிய அறிவிப்பு வெளிவந்து மிகக் குறுகிய காலத்தில் இது பற்றி தமிழர்களால் அறிவிக்கப்பட்டும், இந் நிகழ்வினை  பின்போட்டிருக்கமுடியாதென்று கூறுவது எனக்கு ஆச்சர்யத்தைத் தருகிறது.

இவ்விழாபற்றிய அறிவித்தல் கிடைத்து ஒரு சில நாட்களுக்குள் நுளைவுச்சீட்டுக்கள் விற்றுவிட்டன, அதனால் திகதியை மாற்றமுடியாது என்னும் கருத்தை கூறுவது நியாயமா என்பதையும், ஒரு மாற்றுத்திட்டத்தை ஏற்படுத்தியிருக்க முடியாதா என்னும் கேள்விக்கான விடையை உங்களிடமே விட்டுவிடுகிறேன்.

பிளவுண்டிருக்கும் இனங்களுக்கிடையிலான இணக்கப்பாட்டை, ஒற்றுமையை மதிக்கும் எவரும்  தமிழர்களின் உணர்வுரீதியான முக்கிய விடயம் சுட்டிக்காட்டப்படும் போது அது பற்றி சிந்திக்காது தொடந்தும் கசப்புணர்வுகளை வளர்க்கும், காயங்களைக் கிளரும்,  நடவடிக்கைகளை முன்னெடுக்கமாட்டார்கள் என்பதை நாம் அனைவரும் அறிவோம்.

சமூகங்களுக்கு இடையே நட்புறவையும், ஒற்றுமையையும் சகிப்புத்தன்மையையும் வளர்க்கவேண்டும் என்று கூறும் மனிதநேயமுள்ள தமிழர்கள், தமிழ்பேசும் மக்கள், பெரும்பான்மையினத்தவர்கள் ஆகியோர்  ஈழவிடுதலைப் போடாட்டத்தில் பங்குபற்றிய அனைத்து விடுதலைப் போராளிகளும் தமிழர்கள் என்று தம்மைக் கூறிக்கொள்பர்கள் அனைவரின் மனங்களிலும் தியாகிகளாகவே இருக்கிறார்கள், இருப்பார்கள் என்பதனை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்வார்கள். காரணம் அவர்களிடம் சக மனிதனின் மனதையும், அவனது கருத்துக்களுக்கு மதிப்பளிக்கும் பெருந்தன்மையும் இருக்கிறது.

இன ஒற்றுமையையும், சமத்துவத்தையும் விரும்பும் The Srilankan assosiation of norway க்கு சக மனிதனின் மனதையும், அவனது கருத்துக்களுக்கு மதிப்பளிக்கும் பெருந்தன்மையும் இல்லாதிருக்கிறது என்பதையே அவர்களின் இந் நடவடிக்கை காட்டுகிறது. அத்துடன் அவர்கள் தமிழர்கள் மத்தியில் தமக்கிருக்கும் நற்பெயரையும் சிதைத்துக்கொள்கிறார்கள் என்பதயையும் அவர்கள் உணராதிருக்கிறார்கள்.

இனங்களுக்கிடையில் நல்லுறவைப் பேணுகிறோம் கூறப்படும் கருத்துக்களை இலங்கைத் தூதுவராலயம் நேர்மையாக முன்னெடுக்கிறது என்றால், அவர்களுக்கிருக்கும் ”சகிப்புத் தன்மையுடன், நட்புறவுடன், பெருந்தன்மையுடன்” இவ் விழாவினைப் பின்போட்டிருக்கலாமல்லவா?

இலங்கைத் தூதுவரே இவ்விழாபற்றி தமிழர்கள் கூடுமிடத்தில் விளம்பரம் செய்வது எதைக்காட்டுகிறது? இதுவா அவர்களால் கூறப்படும் சகிப்புத்தன்மை, பெருந்தன்மை, நட்புணர்வு, இணக்கப்பாடு?

எனக்கு பெரும்பான்மையினத்தவருடன் எதுவித விரோதமோ குரோதமோ இல்லை. ஆனால் விழா நடைபெறும் காலம் தவறு என்பதே எனது கருத்து.

தவிர இவ்விழாவின் மூலம் ஒரு சிறுபான்மைச் சமூகத்தின், பெரும்பான்மையினரை வேண்டுமென்றே சீண்டுவது போலவும், அச் சமூகத்தை அச் சமூகத்தவரைக்கொண்டே மேலும் பலவீனமாக்குவதையும், பிளவுபடுத்துவதையும் மிகவும் தெளிவாக காணக்கூடியதாகவிருக்கிறது. பிரிததாளுதற் தந்திரமே இது. இதை வேறு என்னவென்று கூறுவது?

விடுதலைப் புலிகளின் கருத்துக்களுக்கு மாற்றுக் கருத்துக்களைக்கொண்டிருக்கும் ஒஸ்லோவாழ் ஏனைய தமிழ் இயக்கத்தவர்கள் கூட, தமக்கு இவ் விழாவிற்கான அழைப்புக் கிடைத்த போதும், அதனை எமது சமூகத்தின் நலம் கருதி, அழைப்பினை ஏற்கமுடியாது என்றும் அதற்கான காரணத்தை விளக்கியும் உள்ளார்கள்.

இவ்விடயம் பற்றிய எமது சமூகத்தின் அதிர்வுகளை உள்வாங்கி, Roots இசைக்குழு இவ்விழாவிற்கு இசையமைக்காது தவிர்த்துள்ளது பாராட்டத்தக்கது. கலைக்குழுக்களுக்கும் சமூகம் பற்றிய பிரஞ்ஞை இருக்கிறது, எமது சமூகத்தின் கருத்துக்களுக்கு அவர்கள் மதிப்பளிக்கிறார்கள் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணமாகும்.

ஆனால் வேறு சில தமிழர்கள் இந் நிகழ்வில் கலந்து கொள்கிறார்கள், இசையமைக்கவும் செய்கிறார்கள்.

இவ்விழாவில் கலந்து கொள்ளும் தமிழர்களுக்கு மாவீரர்நாள் பற்றிய பிரஞ்ஞை இல்லாதிருக்கலாம் அல்லது அவர்கள் மாவீரா்நாளில் ஏற்புடையாதவர்களாக இருக்கலாம். அது அவர்களின் தனிப்பட்ட கருத்து. அதில் தலையிடுவதற்கு எவருக்கும் உரிமையில்லை.

ஆனால் அவர்கள் அவ் விழாவில் கலந்துகொள்வதால், எமது சமூகத்தில் ஏற்படும் விசனங்களையும், கசப்புணர்வுகளையும், பேரினவாதிகளின் பிரச்சாரங்களுக்கு அவர்கள் துணைபோவதையும்  அறியாதிருப்பது மிகவும் தூரதிஸ்டவமானது.

இந் நிகழ்வில் கலந்து கொள்ளும் தமிழர்கள் பெரும்பான்மை தமிழர்களின் மன உணர்வுகளை புரிந்துகொள்ளவேண்டும். கருத்துவேற்றுமை இருப்பினும் தமிழர்கள் சில விடயங்களில் ஒற்றுமையாகவே இருக்கிறார்கள் என்னும் எண்ணத்தை பலருக்கும் புரியவைக்கவேண்டிய காலத்தில் நாம் வாழ்கிறோம் என்பதை மறத்தலாகாது.

வெளிப்படையான சுயலாபமும், பிரபல்யமும், ஏனைய வசதிகளுக்காகவும் பேரினவாதத்தின் இப்படியான திட்டங்களுக்கு துணைபோவதன் அபாயத்தை தமிழர்களாகிய நாம் நன்கு உணரவேண்டும்.

இந் நிகழ்வில் கலந்து கொள்ளவிருக்கும் தமிழர்களே, தமிழ்பேசும் மக்களே, பெரும்பான்மையினத்தைச்சேர்ந்தவர்களே! இன்னும் காலம் கடந்துவிடவில்லை என்பதை நாங்களும், நீங்களும் அறிவோம்.

வரலாறு எல்லோரையும் கவனித்துக்கொண்டேயிருக்கிறது என்பதை மறக்காதிருப்போமாக!

கருத்தில் உடன்படுகிறீர்கள் எனின் ஏனையவர்களுடன் பகிர்ந்தால் மகிழ்ச்சி.


தோழமையுடன்
சஞ்சயன்

No comments:

Post a Comment

பின்னூட்டங்கள்