தீராத குதூகலங்கள்

இன்று காலை நிலக்கீழ் புகையிரதத்தை நோக்கி நடந்து கொண்டிருந்தேன். முகத்தில் சூரியனின் இளம் சூடு பட மனமெல்லாம் கூதூகலமாய் இருக்க, ‌ வீதியோரத்து பனி உருகி ஓடிக்கொண்டிருந்தது. மெதுவாய் நிலக்கீழ் புகையிரதப் நிலையத்துப் படிக்கட்டுகளில் இறங்கிக் கொண்டிருந்தேன்.

படிகள் முடியுமிடத்தில் ஒரு ஒரத்தில் ஒரு எலிப் பொம்மையொன்று எடுத்து வைக்கப்பட்டிருந்தது. யாரோ ஒரு குழந்தை தவறவிட்டதை யாரோ ஒருவர் எடுத்து கவனமாக கண்ணில் படும்படியாக அந்த ஓரத்தில் வைத்திருந்தார். அருகில் போய் அதைப் பார்த்தேன். மிகவும் அன்பாய் அதை பாவித்திருப்பது அதன் பாவனையில் தெரிந்தது. அது புதிய பொம்மையல்ல. சிலகாலங்கள் அன்பாய் அணைக்கப்பட்டிருந்ததற்கான அடையாளங்கள் தெரிந்தன.  அதைத் தொலைத்த குழந்தை என்ன பாட்டைப் படுகிறதோ.. அதை விட அக் குழந்தையின் பெற்றோர் படும்பாட்டை நினைத்துப் பார்த்தேன். வயிற்றுக்குள் ஏதோ பிசைந்தது.

என் தம்பியின் மகளிடமும் இப்படியான முயல் போன்ற தோற்றத்துடனான ஒரு பொம்மை இருக்கிறது. ”சின்னமீ” என்று அதற்கு பெயரிட்டிருக்கிறாள். அதை எனது மகள்கள் அவளுக்கு பல வருடங்களுக்கு முன் கொடுத்தார்கள். அப்போ அவளுக்கு 2 -3 வயதிருக்கலாம்.  தற்போது 8 வயதாகிறது அவளுக்கு அன்றில் இருந்து அந்த ”சின்னமீ” இல்லாமல் அவள் இல்லை. அவள் இல்லாமல் ”சின்னமீ” இல்லை.

ஒரு முறை எங்கோ போய் வரும் போது  துக்கக் கலக்கத்தில் ”சின்னமீ” வீதியோரத்தில் விழுந்துவிட்டது. அவளும் கவனிக்கவில்லை. ”சின்னமீ யும் சத்தம் போடவில்லை.  வீடு வந்து சேர்ந்ததும் ”சின்னமீ யை காணவில்லை என்ற அழுது ஆர்ப்பாட்டம் பண்ண... அவளின் அப்பா தனது விதியை நொந்தபடியே வந்த வழியே நடந்து போக ”சின்னமீ” மழையில் நனைந்து, வீதி அசுத்தத்தில் ஊறி  உரு மாறியிருந்திருந்த போது அதை மீட்டு, முதலுதவி செய்து மகளிடம் ஒப்படைத்தபின்பே அவள் அடங்கினாள் என பின்பொரு நாள் அறியக் கிடைத்தது.

அவளுக்கு ஒரு தம்பி பிறக்கும் வரை ”சின்னமீ”க்கும் அவளுக்கும் பிரச்சனை வந்ததில்லை. தம்பி பிறந்து அவனுக்கு ”சின்னமீ” மீது ஆசை  வந்ததால் உரிமைப் பிரச்சனை வந்திருக்கிறது. ”சின்னமீ” என்னுடையது என்கிறான் அவன். இல்லை என்னுடையது என்கிறாள் இவள். அவர்களின் சண்டையை மௌனமாய்  பார்த்தபடியே என்னை இழுத்துக் கிழித்துவிடாதீர்கள் என்கிறது ”சின்னமீ”. எனக்கும்  அவர்கள் ”சின்னமீ” ஐ இழுக்கும்  போது மனம் திக் திக் என்றிருக்கிறது. ”சின்னமீ” யின் கை, கால் களன்றுவிட்டால் என்ற பயம் தான்.

தன் தம்பி நித்திரைக்குப் போகும் போது அழுது ஆர்ப்பாட்டம் பண்ணிணால் மட்டும் ”சின்னமீ யை அவனிடம் கொடுப்பாள்.  இவளுக்கு நித்திரை வந்தால் மெதுவாய் தம்பியிடம் போய் அதை எடுத்து வந்து ”சின்னமீ யை முக்கினருகே வைத்தபடியே தூங்கிப் போகிறாள். தம்பி இவளுக்கு முன் எழும்பியவுடன் மெதுவாய் ”சின்னமீ யை கடத்தி வருகிறான்.  இப்படி தான் கடத்தப்படுவதையும், மீட்கப்படுவதையும் ”சின்னமீ” மட்டும் ரசித்துக்கொண்டிருப்பதாகவே எனக்குப் படுகிறது.
 
”சின்னமீ” மிகவும் குண்டாகவும், அழகாவும் இருந்திருந்தது பல வருங்களுக்கு முன்.  தற்போது மிகவும் நலிந்திருக்கிறது. ஆனால் தற்போதைய அழகு ”சின்னமீ” க்கு உயிர் கொடுத்திருக்கிறது என்பேன் நான். அதன் கை, கால்களும் ஆங்காங்கு கிழியத் தொடங்கியிருக்கிறது. என்றோ ஒரு நாள் ”சின்னமீ ” யின்  அவயங்கள் கிழியப் போகின்றன என்று புரிகிறது. அந்த நாளை மிகவும் பயத்துடன் எதிர்பார்த்திருப்பார்கள் எனது தம்பி வீட்டார், என்பது மட்டும் நிட்சயம். அந்த நாள் எல்லோருக்கும் வலி மிகுந்ததாய் இருக்கும். ”சின்னமீ”க்கும் கூட.

இப்படித்தான் எனது  எனது 45 வது பிறந்தநாளுக்கு எனக்கொரு கரடிப்பொம்மை வாங்கித் தந்தாள் எனது இளைய இளவரசி. (கரடிக்கு குளிர்காலத்து உடை, சப்பாத்து, கண்ணாடி வாங்க வேண்டும் என்றுமிருக்கிறாள். அதற்கும் தலையாட்டியிருக்கிறேன் வழமை போல்).

அந்தக் கரடியை என் தலையணைக்கருகில் வைக்க உத்தரவு வந்தது. வைத்திருக்கிறேன். தினமும் அதனுடன் பேச வேண்டும் என்றாள். பேசிக்கொள்வேன். (என்ன மொழியில் பேசுகிறேன் என்று நீங்கள் கேட்கப்படாது.. ஆமா). கரடியும் இன்னொரு மிருகத்துடன் இருப்பதாலோ என்னவோ பிரச்சனை தராமல் இருக்கிறது. அந்தக் கரடியில் இளையமகளின் வாசனை இருப்பது போல் இருக்கிறது எனக்கு. பூவினும் மென்மையான வாசனை அது.  தினமும் அதை தடவிக்கொடுத்த பின்பே தூங்கிப்போகிறேன். பல இடைவெளிகளை ஏதோ ஒருவகையில் நிரப்புகிறது அந்தக் கரடிப் பொம்மை.

கிழண்டுபோயிருக்கும் எனக்கே பொம்மையின் அருகாமை அவசியமாயும், ஆறுதலாயும் இருக்கும் போது பச்சைக் குழந்தைகள் தங்கள் பொம்மைகள் இன்றி தூங்க மறுப்பதில் தவறென்ன இருக்கிறது.

அல்லது நான் தான் இன்னும் குழந்தை என்னும் நிலையை கடந்து வராதிருக்கிறேனோ?  அப்படியும் இருக்கலாம். அது உண்மையாய் இருக்கவேண்டும் என விரும்புகிறேன்.


இன்றைய நாளும் நல்லதே!

எனது நெருங்கிய நண்பர் Mr. Been அவர்களிடமும் கரடிப் பொம்மை இருக்கிறது. பார்க்க http://www.youtube.com/watch?v=2ajUewCO6zQ&feature=fvsr



.

4 comments:

  1. நாளாந்த பா வனைப் பொருள் இல்லாத அருமை அதன் இழப்பில்தான் தெரியும். வெளி நாடுகளில் அன்னையரின் பரபரப்பில் தூங்கக்
    உற்ற துணை டெட்டி பயார்( Teddy Bear )

    ReplyDelete
  2. அனுபவம் இல்லையென்றாலும் புரிந்துக் கொள்ள முடிகிறது.

    ReplyDelete
  3. நிதர்சனமான எழுத்து மனதைக் கவர்கிறது.

    ReplyDelete

பின்னூட்டங்கள்