விளைந்த பனியும் நிறைந்த மனமும்

நேற்று மாலை வேலை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தேன். வானில் இருந்து பூக்களை தூவுவதைப் போல் பனி மெது மெதுவாய் கொட்டத் தொடங்கியிருந்தது. பனியின் அழகு மனதுக்கு இதத்தைத் தரும். ஆனால் அது வழுக்கும், விழுந்தெழும்ப வேண்டும், கால் புதைய புதைய நடக்கவேண்டும், கால்கள் நனைந்து குளிரும் என்று பல சிக்கல்களும்  உண்டு.

வீட்டைநெருங்கும் போது பனி மழை்துளிகளுடன் கலந்து ஒரு வித கலவையாய் கீழிறங்கிக்கொண்டிருந்தது. இப்படியான பனி மிகுந்த  சிரமத்தைத் தரும். வாகனம் ஓடும் போது இப்படியான பனி வாகனத்தை வழுக்கி இழுத்துப்போகச் செய்யும்.

நான் பாதையை கடப்பதற்கு எத்தனித் போது ஒரு காரில் ஒரு வெளிநாட்டவர் எதிரில் வந்தார். நான் அவருக்கு இடம் விட்டு நின்றேன். அவரோ எனக்கு இடம் தர காரை நிறுத்த எத்தனித்தார். அவர் பிரேக் அடிக்க எத்தனித்த போது வாகனம் துப்பாக்கித்தோட்டா என்னை நோக்கி வருவது போல வழுக்கியபடியே என்னை நோக்கி வந்தது. அவரோ பிறேக்ஐ அமத்தியபடியே காரைத் திருப்ப முயற்சிக்க அது நியூட்டனின் விதியை மீற மாட்டேன் என்பது போல என்னை நோக்கி நேரேயே  வந்தது. சற்று பின்வாங்கினேன். எனக்கு 1 மீற்றருக்கு முன்னால் கார் நின்றது. எனக்கும் சாரதிக்கும் என்ன பேசுவது என்றே தெரியவில்லை. நிறுத்தியதற்கு நன்றி என்று சொல்லி மெதுவாய் பாதையைக் கடந்து கொண்டேன்.

அந்த சாரதி பனியில் கார் ஓடி பழக்கமில்லாதவர் என்பது மட்டும் நன்றாகப் புரிந்தது. பனியில் வாகனம் ஓடிப் பழகியவர்கள் திடீர் என பிறேக்ஐ அமத்திப் பிடிக்கமாட்டார்கள். விட்டு விட்டுத் தான் பிடிப்பார்கள். அப்போது வாகனம் மிகுந்த கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.

‌வீட்டுக்குள் புகுந்த பின் இன்று காலை வரை வெளியே செல்லவேண்டிய அவசியம் ஏற்படவில்லை. காலை ஐன்னலால் வெளியே எட்டிப்பார்த்தேன். பனிவிளை பூமி என்று யாரோ சொன்னதில் தவறேயில்லை என்பது போல தாராளமமாய் விளைந்திருந்தது பனி.

பனிக்குள் புதைந்தாலும் கால் நனையாத சப்பாத்தை மாட்டிக்கொண்டு வேலைக்குப் புறப்பட்டேன். ஏறத்தாள 20 - 30 சென்டிமீற்றர் பனி கொட்டிக்கிடந்து வழி எங்கும்.  பனியை வழித்து பாதையை சுத்திகரிக்கும் இயந்திரங்கள் மஞ்சல் நிற மின்னும் ஓளியுடன் ஆங்காங்கே பனியை வழித்துக்கொண்டிருக்க மெதுவாய் நிலக்கீழ் தொடரூந்து நிலையத்துக்கு நடக்கத் தொடங்கினேன்.

எதிரில் ஒரு சிறுமி பனியில் புதைந்தவாறே தாயின் அழைப்பை மறுதலித்துக்கொண்டிருக்க தாயோ கெஞ்சிக்கொண்டிருந்தார். எனக்குள் புன்னகைத்தபடியே அவர்களைக் கடந்த போது இலையுதிர்காலத்துக் காற்றில் தனது உடைகளைத் தொலைத்து நிர்வாணமாய் நின்றிருந்த  மரங்கள் எல்லாம் புத்தம் புதிய பனியுடை போர்த்தி மிக அழகாய்த் தெரிந்தன். கறுப்பாய் நீரும், பனியும், கழிவுகளும் கலந்திருந்த பாதைகள் எல்லாம் பனியால் மூடப்பட்டு அழகாய் இருக்க எனது மனமும், உடலும் சுற்றாடலைப் போல் உட்சாகமாகிப்போனது. தூரத்தே சிறுவர்கள் சிலர் பனி உறுண்டைகளை எறிந்து விளையாடிக்கொண்டிருந்தார்கள்.

காலுக்குள் மிதிபட்ட பனி உட்சாகத்தை தரும் பனியின் வகையைச்சேர்ந்ததாக இருந்தது. வடநோர்வேயில் வாழும் ”சாமிஸ்க்”  இன மக்களின் மொழியில் பனியின் தன்மையை வர்ணிக்க 100க்கும் அதிகமான சொற்கள் இருக்கின்றனவாம். வாழ்வின் அரைவாசிக்காலத்தை இந்நாட்டில் கடந்த பின்பு எனக்கும் பனியின் வகைகள் பல உண்டு என்பது புரிய ஆரம்பித்திருக்கிறது. இவற்றில்  மிகவும் பிரபல்யமான பனியை "Pudder" என்கிறார்கள் நோ்வேஜிய மொழியில். அதை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்தால் "Powder" என்று பொருள்படும். எனது காலுக்குள் மிதிபட்ட பனியும் "Powder" வகையைச் சேர்ந்துதே.

மதியம் போல் சற்று மனச்சோர்வுடன் வேலைக்கு அருகே உள்ள ஆற்றோரமாக நடந்த போது முகில்களற்ற வானமும் சூடற்ற சூரியனும் பனியின் அழகை  இன்னும் அழகாகாகக் காட்டிக்கொண்டிருந்தது. நாய்குட்டியொன்று எஜமானின் பந்தை மீண்டும் மீண்டும் பனிக்குள் பாய்ந்து போய் எடுத்து வந்தது. எஜமானனும் அதை பாராட்டிக்கொண்டிருந்தார். சிறப்பான பனிக்காலத்து உடையுடன் வயோதிபதம்பதிகள் என்னைக்கடந்து போயினர். குழந்தையை தள்ளுவண்டியில் வைத்தபடியே பேசிக்கொண்டே நடந்தனர் சில தாய்மார். சிறுவர்கள் பனிச்சறுக்கில் தங்களை மறந்திருந்தனர்.


இப்படி என்னைச் சுற்றியிருந்த உலகம் அழகான பனி விளைந்ததால் மகிழ்ச்சியாய் இருந்து மட்டுமல்லாமல் ஒரு விசரனையும் உட்சாகப்படுத்தியிருந்தது.

மனிதர்களின் மனநிலையை உணர்ந்து இயற்கை செயற்படுகிறதோ என்னவோ என்று எண்ணியபடியே வேலைக்குள் புகுந்து கொண்டேன்.

இன்றைய நாளும் நல்லதே.



.

No comments:

Post a Comment

பின்னூட்டங்கள்