விடையற்ற வினாக்கள்

அதிக நாட்களின் பின்  நேற்று மிகவும் ஆறுதலான தூக்கம் என்னை ஆட்கொண்டதை காலை எழும்பிய போது உணரக்கூடியதாக இருந்தது. மனமும் உடம்பும் உட்சாகமாக இருக்க வேலைக்கு ஓடினேன். வேலையில் மூழ்கியிருந்த போது அலைபேசி அழைக்க, அதை எடுத்த போது ”வணக்கம் அண்ணே, என்னைத் தெரிகிறதா” என்றார் மறுமுனையில் இருந்தவர் ”அய்யா இது டெலிபோன் உங்களை தெரியாது.. ஆனால் நீங்கள் கதைப்பது கேட்கிறது” என்றேன். அண்ணே முந்தாநாள்  உங்ககிட்ட பேசினேனே” என்றார். அவரின் தமிழ் ”தமிழ்நாட்டுத் தமிழாக” இருந்ததாலும், அதிசயமாக இரண்டு நாட்களுக்கு முன் நடந்த சம்பவத்தை எனது ஞாபகசக்தி ‌ஞாபகத்தில் வைத்திருந்ததாலும்.. 
”ஓம் ஓம்  நாகபட்டினம் தம்பி தானே” என்றேன். ”ஆமா அண்ணே” என்றார் சந்தோசமான குரலில்.  இவர் தான் நான் இரு நாட்களுக்கு முன் எழுதிய விளையும் பனியில் அலையும் வாழ்வு என்னும் பதிவின் கதாநாயகன்.

அன்று ‌நான் சொன்னது போல் எனது நண்பரின் கடைக்கு வந்து அங்கிருந்து என்னைத் தொடர்புகொண்டிருந்தார். அவரின் குரலில் ஒரு வித ஆறுதல் இருந்தது. அவருக்கு தற்காலிகமாக நோர்வேயில் தங்கியிருந்து அகதிகள் அந்தஸ்தத்து கோரும் வசதி கிடைத்திருக்கிறது. அதுவும் ஓஸ்லோவில் உள்ள ஒரு அகதிகள் முகாமில் தங்க வைத்திருந்தார்கள். அவர் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார். அடையள அட்டையும் கிடைத்திருப்பதாகச் சொன்னார்.

நண்பரின் கடையில் ஒரு சிம் கார்ட் வாங்கிக்கொள்ளச் சொன்னேன். வேலை தேடுகிறார் என்றார்.  ”தம்பி, நோர்வேயில வரி செலுத்தும் அட்டை இருந்தால் மட்டுமே வேலை எடுக்கலாம்” என்றேன். அப்படியா என்றார். காற்றுப் போன டயர் மாதிரி இருந்தது அவரின் குரல். ஆனால் நீங்கள் நின்றிருப்பது வெளிநாட்டவர் செறிந்து வாழும் பகுதி. அங்குள்ள கடைகளில் சில வேளைகளில் வேலை கிடைக்கலாம் எனவே கேட்டுப் பாருங்கள் என்றேன்.  நானும் வலை வீசிப் பார்க்கிறேன் ஆனால் என்னை நம்பி இருக்காதீர்கள் என்றேன். ”சரிங்கண்ணா” என்றும் நீங்க செய்த உதவிக்கு ரொம்ப நன்றின்ணா” என்று சொல்லியும் சொல்லி தொலைபேசியை வைத்தார்.

அவரின் அலைபேசி அழைப்பு மனதுக்கு இதமாக இருந்தது. அவருக்கு நான்  செய்தது அவ்வளவு பெரிய உதவியல்ல. சாதாரணமாக யாரும் செய்திருக்கக் கூடியதே. இருப்பினும் மறக்காமல் அழைத்து நன்றி சொல்லிய அவரின் செயல் அவரின் மனதை படம்பிடித்துக்  காட்டுகிறதோ? இருக்கலாம். குப்பையான உலகத்தில் குண்டுமணிகளும் உண்டு.

அவருடனான தொடர்பின் பின் வேலையில் மூழ்கியிருந்தேன். மதியம் போல் ஒரு மின்னஞ்சல் வந்திருந்தது. அனுப்பியவரின் பெயர் புதிதாக இருந்தது. ஏதும் வைரஸ் என்னுடன் விளையாடுகிறதோ என்று சந்தேகம் வர அதையும் பரிசோதித்துப் பார்த்துக் கொண்டேன். அது பரச்சனையற்ற ஒரு மின்னஞ்சலாக இருந்ததால் அதை வாசிக்கலானேன்.

நோர்வேஜிய மொழியில் மின்னஞ்சல் இப்படி இருந்தது.

சஞ்சயன்!

உனக்கு புது வருட வாழ்த்துக்கள். நீ நலமாய் இருப்பாய் என நம்புகிறோம். நீ திருத்தித் தந்த கணணி மிகவும் சிறப்பாக வேலை செய்கிறது. நீ இங்கு வந்து கணணி திருத்தும் போது ஒரு வேலைக்காக நேர்முகப்பரீட்சைக்கு சென்று வந்ததாகக் கூறினாய். வேலை கிடைத்துவிட்டதா? எனது மனைவியும் உனக்கு தன் அன்பைத் தெரிவிக்கச் சொன்னார்.

இவ்வண்ணம்
பேத்தர்


எனக்கு இவரை ஞாபகத்தில் இருக்குமா? அப்படி இருந்தால் அது உலக அதிசயமல்லவா? எனவே அவருக்கு பதில் எழுதினேன்.


பேத்தர் தம்பதிகளுக்கு!

உங்கள் மின்னஞ்சலுக்கு நன்றி. உண்மையில் உங்களை யார் என்று அடையாளம் காண்பது சிரமாக உள்ளது. தயவு செய்து எனது ஞாபக சக்தியை மன்னித்துவிடுங்கள். நீங்கள் யார்? எங்கு வாழ்கிறீர்கள் என்பதை அறியத்தந்தால் சிலவேளைகளில் எனது அதீத ஞாபகசக்தி உங்களை ஞாபகத்தில் வைத்திருக்கலாம்.

நான் நேர்முகப்பரீட்சைக்கு சென்ற வேலை கிடைத்துள்ளது. நான் தற்போது நோர்வே வெளிநாட்டமைச்சகத்தில் கணணிப்பிரிவில் தொழில்புரிகிறேன்.

உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி. உங்கள் துணைவியாருக்கு எனது அன்பையும், நன்றியையும் தெரிவியுங்கள்


இவ்வண்ணம்
சஞ்சயன்


அவரிடம் இருந்து உடனேயே பதில் வந்தது. அவர்கள் யார் என்று ஞாபகத்திலும் இருந்தது. அவர்கள் மிகவும் வயதானவர்கள். அவருக்கு காது கேட்காது. அவரின் மனைவிக்கு ஞாபகசக்தி மிக மிகக் குறைவு. இவர்களைப் பற்றி நான்கு மாதங்களுக்கு முன் ”மறதியும் மறையாத மனிதமும்” என்னும் பதிவிட்டிருந்தேன்.


இத்தனை மாதங்களின் பின்ன்னான பின் ஏன் என்னை அவருக்கு ஞாபகம் வரவேண்டும்? அப்படி வந்தாலும் மின்னஞ்சலில் அன்பாய் விசாரிக்க வேண்டடிய அவசியமென்ன? நான் அவர்களின் உயிரைக் காப்பாற்றிய வைத்தியன் என்றாலாவது பறவாயில்லை என்னை மதிக்கிறார்கள் எனலாம். நானோ அவர்களின் கணணியை திருத்தியவன். அதுவும் இலவசமாக அல்ல. அப்படியிருக்க இந்த விசரனை பேத்தரும் அவர் மனைவியும் நினைவில் வைத்திருக்க வேண்டிய அவசியமென்ன?

நான் முன்பொருநாள் எழுதியது போல் ”சில கேள்விகளுக்கு விடை தேடக்கூடாது”. பேத்தர் பற்றிய கேள்வியும், அந்த நாகபட்டிண தம்பி பற்றிய கேள்வியும் விடை தேடக்கூடாத கேள்விகளே.

இன்றைய நாளை ஏகாந்தமாக்கிய அந்த நாகபட்டின தம்பிக்கும், பேத்தர் தம்பதிகளுக்கும் எனது நெகிழ்ச்சியான நன்றிகள்.


பி.கு: நாகபட்டின தம்பின் பெயர் மறந்துவிட்டது.. தம்பி மன்னித்துவிடு இந்தப் பாவியை.


.

2 comments:

  1. அருமையான பதிவு நண்பரே! வெளிநாட்டவர்கள் எவ்வளவு நன்றி உணர்ச்சி உள்ளவர்கள் என்பதற்கு இது ஓர் சிறந்த எடுத்துக்காட்டு! வாழ்த்துக்கள்! அப்படியே கொஞ்சம் நம்ம வீட்டுப்பக்கமும் வந்து போங்க:



    றஜீவன்

    பிரான்ஸ்.

    ReplyDelete
  2. அந்த நாகபட்டின தம்பிக்கு ஒரு நல்ல முடிவு கிடைத்ததையிட்டு மிக்க சந்தோசம்.

    ReplyDelete

பின்னூட்டங்கள்