வஞ்சகத்தின் பேரொளி


எனக்கு மனிதர்களுடன் பிரச்சனைகள் வருவது மிகவும் குறைவு. நாணல் போல் வாழ்வது அதற்குக் காரணமாயிருக்கலாம்.  இருப்பினும் என்னை வெறுப்பவர்கள் இருக்கிறார்கள். அதற்குக் காரணம் அவர்கள் என்னைப் புரிந்து கொள்ளவில்லை என்று எனது ஈகோ நினைத்துக் கொண்டிருக்கிறது. நானும் அதனுடன் வாதாடி அலுத்தோய்திருக்கிறேன். நானும் என்னை வெறுப்பவர்களுடன் சமரசம் செய்து கொண்டிருக்கலாம்,ஆனாலும் ஏனோ மனம் அவர்களுடன் சமரசம் செய்து கொள்ளவில்லை. ஈகோ என்னிடமும் இருக்கிறது. இருப்பினும் தற்போதைய காலங்களில் சமரசத்தையே விரும்புகிறேன்.

இது இப்படி இருக்க சிலரைக் கண்டால் மட்டும் மனம் ”அவதானம் சஞ்சயா அவதானம்” என்று சொல்லும். முட்டாள்தனமாக அதை நான் அலட்சியம் செய்த நாளில், வாழ்க்கை பெரும் பாடங்களை கற்பித்தது எனக்கு. அதைத் தான் பகிர நினைத்திருக்கிறேன் இன்று.

1986ம் ஆண்டு, சித்திரை மாதம், வெய்யில் சென்னை நகரத்தை எரித்துக் கொண்டிருந்த நாட்களில் ஒரு மேன்சன் ஒன்றில் தங்கியிருந்தேன். அந்த ‌அறைக்குப் பொறுப்பானவர் ஒரு இயக்கத்தில் முக்கியமானவராயிருந்தார். அவர் எனது நண்பனின் மாமா.

நான் இந்தியாவில் மொக்கை போட்டுத் திரிந்த காலங்களில் எங்கு எப்படிப் போவது, எந்த கல்லூரியில் அனுமதி கிடைக்கும், என்ன என்ன விண்ணப்பங்கள் நிரப்ப வேண்டும், எங்கு என்ன படம் எத்தனை மணிக்கு ஓடுகிறது, இலங்கையில் இருந்து கொண்டு வரும் பொருட்களை எங்கே விற்பது என்று ஒரு சிறியதொரு வீக்கிபீடியாவாக நான் இருந்தேன். (பீத்திகிறான் என்று நீங்கள் திட்டப்படாது .. ஆமா)

ஒரு நாள் நண்பனின் மாமா என்னிடம் ஒருவரை அறிமுகப் படுத்தினார். கண்டதுமே மனதுக்குள்  கவனம் ராஜா கவனம் என்று ஆயிரம் மணியடித்தது. அவரது கண்களில் வஞ்சகம், வஞ்சகமில்லாமல் குடியிருந்தது. அவரின் உடம்பின் மொழிகளும், அதிர்வுகளும் என்னை எச்சரித்துக் கொண்டிருந்தன.

நண்பனின் மாமா இவருக்கு தேவையானதை கட்டாயம் செய்து கொடுங்கள். மிகவும் வேண்டியவருக்கு தெரிந்தவர், மாலை சந்திக்கிறேன் என்று சொல்லியடி‌யே மறைந்து போக நானும் அவரும் தனித்து விடப்பட்டோம்.

”உங்களுக்கு என்ன உதவி தேவை” என்றேன்.
”பாடசாலைக்கு அனுமதிப் பத்திரம் நிரப்பி கொடுக்க வேண்டும்” என்றார்.
நாம் இருந்த இடத்தில இருந்து பஸ் எடுத்துப் போக வேண்டும் அவரின் பாடசாலைக்கு.
பசிக்குது என்றார் புதிய நண்பர்.
நாயரின் டீக்கடையில் இட்டலி கொட்டிக் கொண்டோம். எனது செலவிலேயே அதீதமாய் சாப்பிட்டார். நாயரிடம் கணக்கு இருந்ததால் தப்பினேன்.

எனது கையில் காசு இல்லை. அவரிடம் நீங்க தான் டிக்கட் எடுக்கணும் என்றேன். ம் கொட்டினார். ம் இல் விருப்பம் இருக்கவில்லை என்று புரிந்தது. பஸ் வர நீங்க பின்னால ஏறி டிக்கட் எடுங்க என்று சொல்லி முன்னால் ஏறிக் கொண்டேன். பஸ் சைதாப்பேட்டை வரை ஏறத்தாள அரை மணிநேரமாய் நிம்மதியாய் போய்க் கொண்டிருந்தது.  சைதாப்பேட்டை பாலத்தை தாண்டியதும் டிக்கட் பரிசோதகர்கள் கைகாட்டி பஸ்ஐ ஓரம் கட்டி டிக்கட் பரிசோதித்தார்கள். என்னிடம் கேட்ட போது நண்பரைக் காட்டினேன். அவர் ஒரு டிக்கட்ஐ மட்டும் காட்டினார். அது தனது என்றும் வாதித்தார்.

பரிசோதகர்களின் முன்னால் அவமானத்தில் கூனிக் குறுகி நின்றேன். கேலிப் பார்வைகள் உடலைத் துளைத்தன. அசுத்தத்தின் மேல் நிற்பது போல் அருவருப்பாயிருந்தது. தலை குனிந்திருந்தேன்.  என்னுடன் வந்தவர் மெதுவாய் மறைந்து போனார். நான்கு மணிநேரமாய் வெய்யிலில் காய வைத்து விடுதலை செய்தார்கள்.

சைதாப்பேட்டை பாலத்தை நடந்து கடந்த போது ”மவனே நீ அகப்பட்டால்” என நினைத்துக் கொண்டேன். மனம் வெய்யிலைப் போல் சூடாகவிருந்தது. ஆற்றுக்குள்  நின்றிருந்த கழுதைகள் என்னைப் பார்த்துச் சிரிப்பது போலிருந்தது.

பல மணிநேரம் நடந்து மாலை மேன்சன் வந்த போது நண்பனின் மாமா காத்திருந்தார். என்னைப் பார்த்ததும் எங்கே அவன் என்றார். சகலதையும் ஒப்புவித்தேன். கேட்டவர் ஒரு ஆறுதலுக்காக நாயரின் கடையில் மட்டன் பிரியாணி வாங்கித் தந்து போனார். பிரியாணி சுவைக்கவில்லை.

இரவு மொட்டைமாடியில் படுத்திருந்தேன். நட்சத்திரங்கள் கண்ணடித்துக் கொண்டிருக்க, அனுபவித்த அவமானம்  உடம்பில் பிசு பிசுத்துக் கொண்டிருந்தது. தவறு என்னில் இல்லை என்று என்னை ஆற்றிக் கொண்டபடியே தூங்கிப்போனேன். மறுநாள் காலை புதிதாய் விடிந்திருந்தது நான் முழித்துக் கொணட போது.

25 வருடங்களாகப் போகின்றன இது நடந்து.  இன்னுமும் அவரின் கண்களில் இருந்த வஞ்சகத்தின் பேரொளியை உணரக் கூடியதாயிருக்கிறது.





 மறக்க முடியாத அனுபவம் வந்த அந்த நண்பருக்கு இது சமர்ப்பணம் .


.

1 comment:

  1. சிரிப்பு சிரிப்பாய் வருது, ஆனால் சிரிக்கவே கூடாது . சரி அவரை மீண்டும் நீங்கள் சந்திக்கவே இல்லையா? உங்கட மாமாவிடமும் அவரைப்பற்றி கேட்டுவிசாரிக்க வில்லையா? யாருக்கு தெரியும் இனி வரும் காலங்களில் மீண்டும் அவரை நீங்கள் சந்திக்கலாம். எதுக்கும் தயாராக இருங்கள்.

    ReplyDelete

பின்னூட்டங்கள்