23 மே. 2010 நேற்றய தொடர்ச்சி

ஆகா...ஆஸ்பத்திரியில் படுத்தால் என்னமாய் நித்திரை வருகிறது. உலகம் மறந்து துயில்ந்திருந்தேன். திரைச்சீலைக்குள்ளால் திரு. சூரியன் சுட்டெரித்த போது தான் எழும்பினேன். வானம் மேகங்களின்றி செக்சியாய் இருந்தது (நீலமாய் இருந்தது)

எல்லாம் முடித்து (அது தான் ‌எல்லாம் என்கிறேன்.. பிறகு என்ன லொள்ளுக் கேள்வி வேண்டிக்கிடக்கு) பேஸ்புக், ப்ளாக் பார்த்த முடிய வயிறு புகைந்தது. எட்டி ”உதவி தேவை” மணியை இழுத்துவிட்டேன்.


கண்ணிமைக்கும் நேரத்தில் வெள்ளைத்தேவதை என் முன் தோன்றி என்ற வேண்டும் என்றாள். காலையுணவு என்றேன். கால் முளைத்து கட்டிலுக்கு வந்தது காலையுணவு. புகைபோட்டு பதப்படுத்திய சாலமன் (சாலமன் பாப்பய்யா அல்ல), பொரித்த முட்டைமஞ்சற்கரு, சலாட், ஜாம். ஈவு இரக்கமின்றி உட்தள்ளிக் கொண்டேன்.

கவிதாவின் தொப்புள் கொடியை கொஞ்சம் வாசித்த போது மனம் சொல்லியது இதுவல்ல அப்புத்தகத்தை வாசிக்கும் நேரம் என்று. சரி என்று அதை வைத்துவிட்டு பளாக் எழுதத் தொடங்கினேன் (சோமாலியாகாரங்களின் இம்சை பற்றியது).

இடையில் ஒரு வெள்ளைத்தேவதை வந்து ECG எடுக்கவேணும் என்றாள். எதையோ உடம்பில் ஒட்டி, எதையோ பூட்டி, என்னவோ பார்த்தாள்.
வெளிக்கிடு வைத்தியரிடம் என்றாள். மாடு மாதிரி அவள் பின்னால் போன போது வைத்தியரின் கந்தோரைக் காட்டி அங்கு போ என்றாள்.

கதவருகில் வந்து வரவேற்றார் டாக்டர். நாலு தரம் சஞ்சயன் செல்வமாணிக்கம் என்று உச்சரித்துப் பார்த்தார். முடிவில்லை அவருக்கு. சகிக்கவில்லை எனக்கு.

உனக்கு மாரடைப்பு வரவில்லை ஆனால் கொலஸ்ரோல், சீனி, பிரசர் அதிகமாய் இருக்கிறது என்றும் அதை வைத்து ஒரு 30 நிமிடங்கள் அலட்டி நாளை மறுநாள் புதியதோர் வைத்தியசாலையில் ஏதோ இயந்திரம் பூட்டி இதயத்துடிப்பு அளக்க வேண்டும் என்றும் அதற்கு கடிதமும் தந்தார். வாங்கி வீடு வந்து சேர்ந்தேன். நேரம் 13:30


பேஸ்புக் இல் சற்று குந்தியிருந்தேன். சற்றே அலுப்பாய் இருந்தததால் சற்று அயர்ந்த போது தொல்லைபேசி தொல்லை தந்தது. மறுபக்கத்தில் எனது கொம்பனியின் ஒரு வாடிக்கையாளன். இன்டர் நெட்டை காணவில்லை என்று பெரியோர் குண்டைத் தூக்கிப் போட்டார். கிண்டலாய் அவ்வளவு பெரிய சாமான் துலையாது என்ற போது பெரிதாய் சேர்ந்து சிரித்து உடனே வா என்றார்.


அவரிடம் போன போது அவரின் நாயும் அங்கிருந்தது. நாயா அது பேய் மாதிரியல்லவா இருந்தது. எனக்கும் அந்த மனிதர்களின் நண்பர்களுக்கும் பெரிதாய் ஒத்துவருவதில்லை அந்தக் காலம் தொடக்கம். நாயோ புதிய மனிதனை மணந்து கொண்டிருக்க நான் காற்றில் இருந்த நாயின் நாற்றத்தை சுவாசித்துக் கொண்டிருந்தேன். நாய் நிமிர்ந்து நேரே என்னைப் பார்த்த போது கண்ணை மற்றப்பக்கம் திருப்பிக் கொண்டேன்.


கணணியைப் பார்த்தேன். வயலெஸ் பட்டன் ஓப் ஆக இருந்தது. ஒன் ஆக்கினேன். துலைந்து போயிருந்த இன்டர்நெட் மீண்டு வந்திருந்தது. தேவைக்கு அதிகமாகவே பாராட்டினார். ஆனால் குறைவாகப் பணம் தந்தார்.


திரும்பி வீட்டவந்து அயர்ந்து தூங்கினேன். தொ(ல்)லைபேசிச் சத்தத்தில் எழும்பிய போது மறுகரையில் ஆப்கான் நாட்டு நண்பரொருவர் நின்றிருந்தார். அவர் ஒரு அரசர்.. ஆம் அவரின் பெயர் கான். (மதனின் வந்தார்கள் வென்றார்கள் வாசித்ததில் கான் என்றால் அரசன் எனறு அறியக்கிடைத்தது). வரமுடியுமா என்றார்? மன்னனின் அழைப்பை மறுக்க முடியுமா என்ன?

எழும்பி குளித்து வெளிக்கிட்ட போது நட்பு சாப்பிட வாடா என்றது உரிமையாய்.

சாப்பிட்டு, மன்னனின் அரண்மணை நோக்கி வாகனத்தை திருப்பினே். வெளிநாட்டுவர்களுக்கே சொந்தமான புறநகர்ப்பகுதியில் இருந்தது மனன்னனின் அரண்மணை. பார்க்கிங் தேடியலுத்து தொலைவில் நிறுத்தி, நடந்து போய் மன்னனை தரிசித்த போது மன்னன் இன்னும் நால்வருடன் ஒரே பாத்திரத்தில் (பெரிய பாத்திரம்) கடலைக்கறியுடன் பாண் தின்றுகொண்டிருந்தார். அன்பாய் வா சாப்பிடுவோம் என்ற போது கலாச்சார அதிர்ச்சியின் காரணமாக பயத்தில் வேண்டாம் என்றேன். அப்ப தேத்தண்ணி கு‌டி என்ற போது ஓம் என்றேன். ஆப்கான் தேத்தண்ணி வந்தது குடித்தேன்.

வின்டோஸ் ஏழு போடு என்றார் ஒரு கணணி‌யைக் காட்டி. சரி என்று போட்டுக் கொண்டிருந்த போது (ஒரிஜினலான லைசன்ஸ் ஆ என்று நீங்க கேட்டா எனக்கு கெட்ட கோபம் வரும்) ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளதாக தொல்லைபேசி சிணுங்கியது. எடுத்துப் பார்தேன். இப்படி எழுதியிருந்தது அதில்.


ஹாய்! கொஞ்சம் குறோணர்கள் கடன் கிடைக்குமா? என்று

பிச்சைக்காரனிடம் கடன் கேட்பது யார் என்று பார்த்தேன்.. அட நம்மட செபஸ்தியான் என்னும் போலந்து நாட்டு ஜீவன் ஒன்று.

அரசனின் கதையை சற்றே நிறுத்தியிருக்கிறேன்

இவ்விடத்தில் நாம் ஏறத்தாள 1 மாதம் பின்னோக்கிப் போக வேண்டும். எனென்றால் அப்போது தான் உங்களுக்கு நான் இந்த செபஸ்தியானை அறிமுகப்படுத்தலாம்.

அதுவும் ஒரு மாலைநேரம் தான். செபஸ்தியான் தொலைபேசியில் வந்து தனது கணணி செத்து விட்டதாகவும் என்னால் உயிப்பிக்க முடியுமா எனவும் கேட்டார். நானென்ன கடவுளா.. பார்த்த பின் தான் சொல்லலாம் என்றேன். சரி என்றவன் ஆனால் ஒரு பிரச்சனை என்றான். என்னய்யா உன்ட பிரச்சுனை என்ற போது.. தன்னிடம் இப்போதைக்கு காசு இல்லை எனவும், திருத்தித்தந்தால் காசு வரும் போது தருவதாகவும் சொன்னான்.


என் உள் மனதுடன் உரையாடினேன். பதில் வழமை போல் சாதகமாகவே இருந்தது உதவி கேட்பவருக்கு. சரி பறவாயில்லை என்றேன். வீட்ட கொண்டு வா பார்க்கிறேன் என்ற போது பரிதாபமாய் உன்னால் வரமுடியாதா என்றான்?


சரி விதி அழைக்கிறது என்று நினைத்தபடியே வாறேன் என்றேன். மாற்றுக் கணணணி இருந்தால் கொண்டு வா என்று சொல்லி தொடர்பைத் துண்டித்தான் செபஸ்தியான்.

அவனைச் சந்தித்த போதே மனம் அவன் பால் பரிதாபப்படத தொடங்கியிருந்தது. (நாம கொஞ்சம் சாப்ட் டைப்பு)

கணணியை பார்த்தேன் செத்துப் போயிருந்தது அது. உயிர்ப்பிப்பதற்கு மூன்று நாட்கள் வேணும் என்றேன் பகிடிடியாய்... கணணணி என்ன யேசுவா என்றான் பதிலுக்கு நக்கலாக...
இவனிடம் கவனமாயிரு என்றது மனம்.

நான் அவனைக் கண்ட போது சோர்ந்து போய் இருந்தான். எனய்யா சோர்ந்திருக்கிறாய் என்று போது சாப்பிட்டு மூன்று நாட்களாகிறது என்றான் தயங்கித் தயங்கி. ஏதும் காமடி கீமடி பண்ணுகிறானோ என்று நினைத்து மீண்டும் கேட்டேன் அதே பதிலைச் சொன்னான்.

சத்தியமாய் அதிர்ந்து போனேன். நோர்வேயில் பட்டிணியா? அதுவும் மூன்று நாள். நம்ப முடியவில்லை. ஆனால் பாவிப்பயல் உண்மையென்கிறானே.


சரி வாகனத்தில் ஏறு என்றேன்.. எதுக்கு என்றான்
போய் சாப்பிடுவோம் என்றேன்.
வந்தான்.
கேபாப் கடையொன்றில் நிறுத்தினேன்
அவனுக்கு கேபாப்பும், எனக்கு சுகர் ப்ரீ கோலாவும் வாங்கிக் கொண்டு வாகனத்தில் ஏறிய போது நன்றி சொல்லி கண்கலங்கி நின்றிருந்தான். முதுகில் தட்டி சாப்பிடு முதலில் பிறகு பேசுவோம் என்றேன்.

முச்சுபபேச்சில்லாமல் சாப்பிட்டு முடித்து கை துடைத்து கோலா குடித்து
நீ நல்லவன் போல என்றான்
(
அண்ணண் வடிவேலுவின் ” நீங்க ரொம்ப நல்லவர்ண்ணே” டயாலாக் ஞாபகத்தில் வந்து போனது
சிரித்து வைத்தேன்

சுய சரித்திரம் சொன்னான்

நாடு போலந்து
நோர்வேயில் பல வருடங்கள்
மூன்று நாட்களுக்கு முன் காதலியால் கைவிடப்பட்டு துரத்தப்பட்டவன்
(f)பாமசி பற்றி ப‌டிக்கிறானாம்
தனக்கு மனநோயிருப்பதாயும்
மருந்து எடுப்பதாயும்
சொன்னான்

கண்கள் நிலையில்லாமல் தழும்பியபடி எதையோ சொல்லிக் கொண்டிருந்து. சரளமாய் நோர்வே மொழி கதைத்தான். ஆனால் ஒரே வார்த்தையை பல தடவைகள் மீண்டும் மீண்டும் உச்சரித்துக் கொண்டிருந்தான். பாவமாயிருந்தது ஒரு இளைஞனை இப்படிப் பார்க்க.

அவனை இறக்கிவிட்டு கையில் சற்று பணமும் குடுத்து உதவி தேவை என்றால் சொல் என்றேன். சற்றே யோசித்தவன்

தன் குரலில்
சந்தேகம் கலந்து கேட்டான்
ஏன் எனக்கு உதவி செய்கிறாய் என்று

தடுமாறிப் போனேன் சற்று நேரம்
சுதாரித்து
தெரியாது
ஆனால் மனம் சொல்லியதைச்
செய்தேன் என்றேன்
நீல நிறமான பளிங்குக் கண்களால்
என் உயிர்வரை ஊடுருவி
நான் சொல்வது உண்மையா என்று ஆராந்து
ஏதோ உணர்ந்து
புன்‌னகைத்தான்

விடைபெற்ற போது மாற்றுக் கணணி கேட்டான்.
இன்னொருவருக்கு சொந்தமான ஒரு கணணியை என் கைகள் எடுத்து கொடுத்திருந்தன.. நான் எனது முட்டாள்தனமான செய்கையை உணர்ந்த போது.

நன்றி சொல்லி மறைந்து போனான் செபஸ்தியான்.
நான் கொடுத்த கணணியின் சொந்தக்காரன் கேட்டால் என்ன சொல்லப் போகிறேன்.. மண்டை வெடித்துக் கொண்டிருந்தது எனக்கு.

‌அடுத்து வந்த 6 நாட்களும் நரகமாய் போனது எனக்கு

தனது கணணியை தா என்றான் கணணியின் உரிமையாளன்
காற்றைப் போல் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்திருந்தான் செபஸ்தியான்.
தெலைபேசி அடித்தது... எடுக்க மறுத்தான்
குறுஞ் செய்திகளை உதாசீனம் செய்தான்

கடுஞ்சினத்தில் அவன் பரம்பரையை திட்டிக் கொண்டிருந்தேன்.

அவனின் வீடும் எனக்குத் தெரியாது. அவனை நான் சந்திதத்ததும் ஒரு பொது இடத்தில்
என்ன செய்ய, ஏது செய்யவெனத் தெரியவில்லை

நட்பிடம் புலம்பித் தீர்த்தேன்
மோடா, மடையா, விசரா என்று பேச்சு விழுந்தது
வாங்கி வைத்துக் கொண்டேன், மௌனமாய்

6ம் நாள் கட்டாயம் கணணி வேண்டும் என்றான் கணணியின் உரிமையாளன். மத்தளத்தின் நிலையில் நான்
சரி.. எனது கணணணியை குடுத்து,உண்மை இயம்பி, பிரச்சனையை முடிப்போம் என்று நினைத்திருந்த போது
தொலைபேசியில் தானே வந்தான் எனதன்பு செபஸ்டியான்.
மன்னித்துக்கொள் என்றான்.
மெளனித்திருந்தேன்
சுகயீனம் காரணம் என்றான்.
கணணியை திரும்பித் தருகிறேன் வா என்றான்
போய் எடுத்து வந்து
உரியவனிடம் ஒப்படைத்து வீடு வந்தத போது
வினை விதைத்தவன் வினை அறுப்பான்
திணை விதைத்தவன் ..... என்னும் முது மொழி ஞாபத்தில் வந்தது.....

அது சரி.. நான் விதைத்திருந்தது வினையா? திணையா?

நோர்வே நாட்டு சுதந்திரதினத்தன்று குறுஞ்செய்தியில் வாழ்த்தும் அனுப்பியிருந்தான் செபஸ்தியான்.

இத்துடன் செபஸ்தியானின் பழைய கதை முடிந்தது. அரசனின் கதை தொடர்கிறது


100 குறோணர்கள்... கடனாய் கேட்கிறான். குடுப்பதா வேண்டாமா என்று மனதுக்குள் போராட்டமே நடந்தது.
இம் முறையும் அவனே ‌ஜெயித்தான்
இன்ன இடத்திற்கு வா தருகிறேன் என்றேன்
வந்து
நன்றி சொல்லி
திருப்பித் தருவதாய் உறுதி கூறி
பெற்றுப்போனான் சில பலகுறோணர்கள்

அவன் வந்த போது வா சாப்பிடுவோம் என்றேன்
தீர்க்கமாய் மறுத்தான்.

அரசனின் கணணி வேலை முடியும் தருவாயி்ல் இருந்தது. அதை முடித்து கொடுத்து
வீடு வந்த போது நேரம் சாமத்தை தொட்டுக் கொண்டிருந்தது.

இன்றைய நாளும் இனிமையானதே

No comments:

Post a Comment

பின்னூட்டங்கள்