வட நோர்வேயில் வேற்றுக் கிரகத்து மனிதன்

இதுவும் எனது வாழ்வை அலங்கரிக்கும் அழகிய தோரணங்களில் ஒன்று
21 வருடங்களுக்கு (1989) முன) நடந்த கதை

எனது வாழ்வை அலங்கரிக்கும் அழகிய தோரணங்களில் இதுவும் ஒன்று:

முன்னொரு காலத்திலே (24 வருடங்களுக்கு முன்பு) நான் வடக்கு நோர்வேயில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் எமது பாடசாலையில் இருந்து சற்றுத் தூரத்தில் இருந்த ஒரு கிராமத்துக்கு கரப்பாந்தாட்டப்போட்டியில் பங்குபற்றுவதற்காகச் சென்றிருந்தோம்.

அங்கு ஒரு சிறிய பையன் (7 -8 வயதிருக்கும்) நான் அங்கு நின்றிருந்த இரண்டு நாட்களுமே என்னைத் துப்பறியும் போலீஸ் போன்று பின் தொடர்ந்தான். என்னையே பார்த்தபடியேசிந்தித்துக்கொண்டிருந்தான்.

எங்கு போனாலும் பின்னால் வந்தான். சிறுநீர் கழிக்கச் சென்றாலும் வெளியில் காத்துக்கிடந்தான்.

உற்று உற்றுப் பார்த்தான்.
மேலும் கீழுமாக ஆராய்ந்தான்
சுற்றிச் சுற்றி வந்து பார்த்தான்

தன் நண்பர்களிடம் என்னைக் காட்டி ஏதோதோ பேசினான்

அந்த இரண்டு நாட்களும் அவனின் கதாநாயகன் நானாகவே இருந்தேன்
என்னடா வில்லங்கம் இது, என சிந்திக்கவைத்தது அவனது பார்வையின் ஆழம்

விளையாட்டு முடிந்து நாம் புறப்படும் நேரமும் வந்தது

நான் எமது பேருந்துக்கு அருகில் நின்றிருந்தேன். எமது பேருந்துக்கு அருகில் வருவதும், என்னருகில் வருதும் தயங்குவதும், பின்வாங்குவதுமாய் நின்றிருந்தான்.

எமது பேரூந்துக்குள் நான் ஏற முயற்சித்த போது ஓடிவந்து என் கையை வந்து பிடித்தான்.
என்ன என்றேன்?

நீ என்ன அதிக நேரம் சூரிய ஒளியில் படுத்திருந்தாயா? அது தான் நீ இப்படி எரித்திருக்கிறாயா? அது தான் இவ்வளது கருகியிருக்கிராயா? என்றா‌ன்.

அவனுக்கு என்ன பதில் சொல்வது என்று தடுமாறினேன். பின்பு சற்றே என்னைச் சுதாரித்துக்கொண்டு, இல்லை, நான் வேறு நாட்டவன், என்னினம் இப்படியான நிறத்தையுடையுது,  எங்களில் பலர் கறுப்பு நிறத்தையுடையவர்கள் என விளக்கினேன்.

அவனுக்குப் புரியவில்லை என்பது எனக்குப் புரிந்தது.

இருந்தாலும் ஓகே, ஓகே என்றான்.

அவனின் தலையைத் தடவிவிட்டு பேரூந்தில் ஏறி யன்னலோர இருக்கையிலிருந்து வெளியே பார்த்தேன்
அப்பொழுதும் என்னனப் பார்த்தபடியே இருந்தான்.

பேரூந்து புறப்பட்ட போது பேரூந்தின் பின்புறமாய் ஓடிவந்து கைகாட்டிபடியே கரைந்து போனான்.

வேற்றுலக மனிதனுடன் இன்று கதைத்தேன் என தாயாரிடம், நண்பர்களிடமும் சொல்லி மகிழ்ந்திருப்பானோ? அல்லது நான் பொய் சொல்கிறேன் என்று நினைத்தானோ?

ஆனாலும் அவனின் கற்பனை என்னை பல நாட்கள் பாதித்தது. இன்றும் அவனை என்னால் மறக்க முடியாதிருக்கிறது.

அவன் முன்பு இத்தனை அழகான ஒரு கறுப்பனைக் கண்டிருக்கவில்லை என்பதே உண்மை.

எல்லாவற்‌றையும் விட அவனின் தேடல் குணம் மிகவும் பிடித்திருந்தது.

No comments:

Post a Comment

பின்னூட்டங்கள்